ஆக்சிஜன் மாஸ்குடன் சோனியா காந்தி... பரபரப்பு போட்டோ வெளியிட்ட ராகுல் காந்தி

Aadmika
Jul 19, 2023,09:05 PM IST

டெல்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆக்சிஜன் மாஸ்க் மாட்டிய நிலையில் விமானத்தில் பயணம் செய்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார் ராகுல் காந்தி. 


இதனால் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் சோனியா காந்திக்கு என்ன ஆச்சு என பதறிப் போய் விபரம் விசாரித்து வருகின்றனர்.


எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் டெல்லிக்கு விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த விமானம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய சோனியாவும், ராகுலும் அவசரமாக விமான நிலையத்தை விட்டு, பலத்த பாதுகாப்புடன் வெளியே சென்றனர்.




இந்த விமானம் எதற்காக அவசரமாக தரையிறக்கப்பட்டது என உடனடியாக எந்த விபரமும் வெளியிடப்படவில்லை. பிறகு தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் அவசரமாக தரையிறக்கப்பட்டது என சொல்லப்பட்டது. 


26 கட்சிகள் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கலந்து கொண்டனர். இந்த கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு 26 கட்சிகளும் ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டது. கூட்டம் முடிந்து, இரவு 09.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து சோனியாவும், ராகுலும் டில்லி புறப்பட்டனர்.


இந்த சமயத்தில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விமானத்தில் பயணம் செய்யும் போது ஆக்சிஜன் மாஸ்க் அணிந்த படி சோனியா அமர்ந்திருக்கும் போட்டோவை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அதோடு, அழுத்தத்தின் கீழ் கருணையின் உருவம் என கேப்ஷன் வேறு பதிவிட்டுள்ளார். இதற்கு தாறுமாறாக கமெண்டுகளும், லைக்குகளும் குவிந்து வருகிறது. சோனியாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் தான் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதா? சோனியாவின் உடல்நிலைக்கு என்ன? என கவலையாக பலர் அக்கறையாக விசாரித்து வருகின்றனர்.