பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்.. நள்ளிரவில் ராகுல் காந்தி போட்ட டிவீட்.. பரபரப்பில் டெல்லி அரசியல்!

Su.tha Arivalagan
Aug 02, 2024,06:31 PM IST

டெல்லி: வயநாடு நிலச்சரிவு பாதிப்பை நேரில் காண வந்திருந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், அந்தத் தொகுதியின் முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தி நேற்று நள்ளிரவு போட்ட டிவீட் டெல்லி அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


வயநாடு தொகுதியிலிருந்து 2 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகுல் காந்தி. 2வது முறையாக அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். அங்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து கவலை தெரிவித்திருந்த அவர் நேற்று தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் அங்கு சென்று பார்வையிட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்துப் பேசினார்.




இந்த நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல்  இரவு 1.52 மணிக்கு அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், நான் லோக்சபாவில் பேசிய சக்கரவியூக பேச்சை இருவரில் ஒருவர் விரும்பவில்லை போலும். எனக்கு எதிராக அமலாக்கத்துறை மூலம் ஒரு ரெய்டு நடத்தத் திட்டமிட்டு வருவதாக அமலாக்கத்துறை வட்டாரத்திலிருந்து எனக்குத் தகவல் வந்துள்ளது. திறந்த கரங்களுடன் அவர்களுக்காக காத்திருக்கிறேன்.. அமலாக்கத்துறையினரே டீ, பிஸ்கட்டுடன் நான் காத்திருக்கிறேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.


ராகுல் காந்தியின் இந்த எக்ஸ் பக்க பதிவு டெல்லியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் லோக்சபாவில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி அனல் பறக்கப் பேசினார். அப்போது இந்த நாட்டை தாமரை என்ற சக்கரவியூகம் சுற்றி வளைத்து வருகிறது. இதனால் விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சக்கரவியூகத்தை தகர்ப்போம் என்று பேசியிருந்தார் ராகுல் காந்தி. மேலும் பட்ஜெட் தொடர்பாக அவர் பேசிய பேச்சுக்களிலும் அனல் பறந்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையில் அடித்துக் கொள்வது போல பாவனை செய்ததும் வைரலானது நினைவிருக்கலாம்.


இந்த பின்னணியில்தான் இப்படி ஒரு டிவீட் போட்டுள்ளார் ராகுல் காந்தி. இதனால் டெல்லியில் அமலாக்கத்துறை ரெய்டு வரப் போகிறதா என்ற பரபப்பு கிளம்பியுள்ளது. 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்னர் பெரிய அளவில் அமலாக்கத்துறை ரெய்டுகள் நடக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.