பிரியங்கா தலையில் ஐஸ் கட்டியை உடைச்சு.. ஓ மை காட்.. உருக வைத்த ராகுல் காந்தி!

Su.tha Arivalagan
Jan 30, 2023,11:56 AM IST
ஸ்ரீநகர்: ராகுல் காந்தி பலரும் "பப்பு" என்று கிண்டலடித்தாலும் கேலி பேசினாலும், அவரது ஒவ்வொரு செய்கையும் அவரது ரசிகர்கள் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டேதான் போகின்றன.



மிக நீண்ட காலத்திற்குப் பேசப்படும் வகையிலான ஒரு பிரமாண்ட யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடித்துள்ளார் ராகுல் காந்தி. இந்த யாத்திரை, ராகுல் காந்தி மீதான இமேஜை முற்றிலும் துடைத்துப் போட்டுள்ளது. அவருக்கும் சரி, காங்கிரஸுக்கும் சரி இந்த யாத்திரை நிச்சயம் நல்ல இமேஜைக் கொடுக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த யாத்திரையின்போது  பல சுவாரஸ்யமான காட்சிகளை மக்கள் காண நேர்ந்தது. ராகுல் காந்தியின் பன்முகங்களும் வெளிப்பட்டு, அடடே என்று பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.  அதில் ஒன்றுதான் தனது தங்கை பிரியங்கா காந்தி மீது அவர் காட்டிய அன்பு.

டெல்லி யாத்திரையின்போது நடந்த கூட்டத்தில் பிரியங்காவுக்கு முத்தம் கொடுத்து அனைவரின் பாசத்தையும் வாரிக் கட்டிக் கொண்டார் ராகுல் காந்தி. தங்கைக்கு அவர் கொடுத்த அந்த பாச முத்தம் நாடு முழுவதும் பேசு பொருளானது. ராகுல் மீதான தனது அன்பையும் தனது பேச்சின்போது காட்டி அனைவரையும் நெகிழ வைத்தார் ராகுல் காந்தி.

இந்த நிலையில் நேற்று ஒரு கலகலப்பான சம்பவம் ஸ்ரீநகரில் அரங்கேறியுள்ளது. நேற்றைய யாத்திரையின்போது ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தியும் இணைந்து கொண்டார். அப்போது கேம்ப்சைட்டில் அனைவரும் காத்திருந்தபோது ராகுல் காந்தி ஒரு சேட்டையைச் செய்தார். 

கை நிறைய ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு பிரியங்காவின் தலையில் போய் உடைத்தார். அதை எதிர்பாராத பிரியங்கா, ராகுல் காந்தியை விரட்டிச் சென்று அவரும் ஐஸ் கட்டியை தூக்கி அவர் மேல் போட்டார். இருவரும் இப்படி அங்கு ஓடியாடி  விளையாடி மாறி மாறி ஐஸ் கட்டிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் போட்டுக் கொண்ட காட்சி அந்த இடத்தையே கலகலப்பாக்கியது. இந்த வீடியோவை தற்போது டிவீட்டாக போட்டுள்ளார் ராகுல் காந்தி.