யாருமே இனி இப்படி செய்யத் துணியக் கூடாது.. அப்படி தண்டிப்போம்.. ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

Su.tha Arivalagan
Mar 29, 2024,06:57 PM IST

டெல்லி: காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையாக ஜனநாயகத்தைத் துண்டாக்கும் வேலையில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிப்போம். இனி யாருமே அப்படி செய்ய கனவில் கூட நினைக்கக் கூடாத வகையில் மிகக் கடுமையான நடவடிக்கையாக அது இருக்கும் என்று காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காங்கிரஸ் கட்சி ரூ. 1800 கோடி வரி கட்ட வேண்டும் என்று கூறி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறை தங்களுக்கு அனுப்பி வரும் நோட்டீஸ்களை எதிர்த்து டெல்லி கோர்ட்டில் காங்கிரஸ் கட்சி போட்டிருந்த வழக்குகளை கோர்ட் டிஸ்மிஸ் செய்த அடுத்த நாளே இப்படி ஒரு நோட்டீஸை வருமான வரித்துறை அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




ஏற்கனவே வங்கிக் கணக்குகளை முடக்கியதால் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு செலவிட பணம் இல்லாமல் அவதிப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்போது ரூ. 1800 கோடிக்கு வரி கட்டுமாறு கூறி வருமான வரித்துறை அனுப்பியுள்ள புதிய நோட்டீஸால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.


வருமான வரித்துறையின் இந்த நோட்டீஸை எதிர்த்து நாடு தழுவிய அளவில் நாளை பெரும் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. மறுபக்கம் ராகுல் காந்தி பரபரப்பான டிவீட் போட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது: 

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஜனநாயகத்தை சிதைத்து துண்டாக்க நினைப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் யாருமே இப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட அஞ்சும் அளவுக்கு அந்த நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும். இது நான் தரும் உத்தரவாதம் என்று கடுமையாக கூறியுள்ளார் ராகுல் காந்தி.