ப்ரோ.. நாம 2 பேரும் சேர்ந்து சைக்கிள் ஓட்டலாமா.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கலகல கேள்வி!

Su.tha Arivalagan
Sep 04, 2024,06:22 PM IST

டெல்லி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டிய வீடியோவைப் பார்த்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சென்னையில் நாம ரெண்டு பேரும் சேர்ந்து சைக்கிள் ஓட்டலாமா என்று கேட்டுள்ளார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து தொழில் முதலீடுகள் தொடர்பான சந்திப்புகளில் பங்கெடுத்து வருகிறார். இடை இடையே தனது வழக்கமான உடற்பயிற்சிகளையும் செய்து வருகிறார். முதல்வரின் ரொட்டீனான உடற் பயிற்சிகளில் சைக்கிளிங்கும் ஒன்று.


அந்த வகையில், தற்போது  சிகாகோவில் முகாமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள கடற்கரைப் பகுதியில் ஹாயாக சைக்கிள் ஓட்டி அந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். இது செம வைரலானது. பலரும் முதல்வரைப் பாராட்டி கமெண்ட் போட்டு வந்தனர்.




இந்த நிலையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி, இந்த வீடியோவைப் பார்த்து சூப்பரான கமெண்ட் போட்டுள்ளார். அதில், சகோதரரே நாம ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் எப்போது சைக்கிள் ஓட்டப் போகிறோம் என்று கேட்டுள்ளார் ராகுல் காந்தி. இந்த போஸ்ட்டும் இப்போது வைரலாகியுள்ளது.


முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் கடந்த சில வருடங்களாகவே நல்ல சகோதப் பாரசத்துடன் பழகி வருகின்றனர். ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் அவரை சிறப்பாக கவனிக்கத் தவறுவதில்லை முதல்வர் ஸ்டாலின்.  அவர்கள் இருவரும் பரிமாறிக் கொண்ட ஸ்வீட் பாக்ஸ்கள் டெல்லி வரை வெகு பிரபலமானது. அதேபோல டெல்லி சென்றால் ராகுல் காந்தியின் அன்பைப் பெறுவதற்கு முதல்வர் தவறுவதில்லை.


இந்த நிலையில் தற்போது முதல்வருடன் சேர்ந்து சென்னையில் சைக்கிள் ஓட்ட விருப்பம் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. வெகு விரைவில் இது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பி விட்டது. பேசாமல் இந்தியா கூட்டணித் தலைவர்கள் இணைந்து சென்னையில் சைக்கிள் பேரணி நடத்தி தேசிய அளவில் பட்டையைக் கிளப்பலாம்.. யோசிங்க யோசிங்க!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்