சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே புடை சூழ.. ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல்

Su.tha Arivalagan
May 03, 2024,06:09 PM IST

ரேபரேலி:  காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 


ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ராவும் உடன் வந்திருந்தார்.


ரேபரேலி தொகுதியில் பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து தற்போது ராகுல் காந்தி மோதவுள்ளார்.




ரேபரேலி மக்களவைத் தொகுதியின் கீழ் பச்ராவன் (தனி), ஹர்சந்த்பூர், ரேபரேலி, சரேனி, உன்சஹர் ஆகிய ஐந்து சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ரேபரேலி தொகுதியில் மட்டும் பாஜக உறுப்பினர் உள்ளார். மற்ற நான்கு தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி எம்.எல்ஏக்கள் உள்ளனர்.  1952 ம் ஆண்டு முதல் ரேபரேலி மக்களவைத் தொகுதி செயல்பட்டு வருகிறது. 


1952 மற்றும் 1957 ஆகிய இரு ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வென்றவர் பெரோஸ் காந்தி. அதாவது மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் கணவர் இவர். அதன் பிறகு 1967 மற்றும் 71 தேர்தல்களில் இந்திரா காந்தி இங்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். இடையில் 1977ம் ஆண்டு இந்தத் தொகுதி ஜனதாக் கட்சி வசம் போனது. அப்போது வென்றவர் ராஜ் நாராயண். 1952ல் நடந்த முதல் தேர்தல் முதல் 1996ம் ஆண்டு வரை (இடையில் 1977 தவிர) மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் இங்கு காங்கிரஸ்தான் வென்றுள்ளது.


1996 மற்றும் 98 தேர்தல்களில் இங்கு பாஜக சார்பில் அசோக் சிங் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1999 தேர்தல் முதல் இந்தத் தொகுதி மீண்டும் காங்கிரஸ் வசம் வந்தது. இன்று வரை காங்கிரஸிடமே இருக்கிறது.  இந்தத் தொகுதியில் 2004, 2006, 2009, 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் சோனியா காந்தி போட்டியிட்டு எம்.பி ஆனார். 


ரேபரேலி தொகுதியில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிதான் அதிக முறை வென்றுள்ளது. அதாவது 17 முறை இக்கட்சி வென்றுள்ளது. பாஜக 2 முறையும், ஜனதாக் கட்சி 1 முறையும் வென்றுள்ளன. காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக ரேபரேலி திகழ்ந்து வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இன்னொரு கோட்டையான அமேதியை பாஜக கைப்பற்றிய நிலையில் ரேபரேலி மட்டும் காங்கிரஸ் வசமே இருந்தது. ரேபரேலியின் வரலாறு மாறுமா அல்லது காங்கிரஸ் கொடியே மீண்டும் கோட்டையில் பறக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.