வயநாட்டில் மாபெரும் பேரணி.. ஆயிரக்கணக்கானோருடன் சென்று .. வேட்புமனு தாக்கல் செய்தார்.. ராகுல் காந்தி

Manjula Devi
Apr 03, 2024,06:00 PM IST

வயநாடு:  கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில்  போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆயிரக்கணக்கானோருடன் பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல்  செய்தார்.


கேரளாவில் உள்ள 20 தொகுதிக்கும் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஒரே கட்டமாக  நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வேட்புமனு தாக்கல் நாளை அதாவது ஏப்ரல் 4ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 8ஆம் தேதி கடைசி நாளாகும்.




கேரளாவில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 20 தொகுதிகளில், 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதம் உள்ள நான்கு தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இரண்டு தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் ஜேக்கப் கட்சி ஒரு தொகுதியிலும், ஆர் எஸ் பி கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.


இந்த நிலையில் நாளை வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுவதால் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வயநாடு தொகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன், பிரமாண்ட பேரணியாக சென்று பெருத்த, ஆரவாரத்துடன் வேட்புமனுவை தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவருடன் சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.


கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.