கை கொடுக்க வந்த கார்த்தி சிதம்பரம்.. ஏன் கண்டு கொள்ளாமல் போனார் ராகுல் காந்தி?

Su.tha Arivalagan
Mar 30, 2023,10:17 AM IST
டெல்லி: நாடாளுமன்ற காங்கிரஸ் அலுவலகத்திற்கு ராகுல் காந்தி வந்தபோது, அவரை எதிர்கொண்டு கை கொடுக்க வந்த கார்த்தி சிதம்பரத்தை, ராகுல் காந்தி பெரிதாக கண்டு கொள்ளாமல் போனது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் பலரும் முன்பு போல ஆக்டிவாக இல்லை. குறிப்பாக தேர்தலில் வெற்றி பெற்ற பல காங்கிரஸ் எம்.பிக்கள் பெரிதாக மக்களிடம் செல்லவில்லை, ஆக்டிவாக வேலை பார்க்கவில்லை. கட்சிப் பிரச்சினைகளிலும் கூட ஒதுங்கியே இருக்கிறார்கள்.



மதுரை எம்.பியான சு. வெங்கடேசன், தனது தொகுதி பிரச்சினைகளில் மின்னல் வேகத்தில் குரல் கொடுக்கிறார்.. யாரைப் பார்க்க வேண்டுமோ போய்ப் பார்க்கிறார்.. டெல்லிக்கும், சென்னைக்கும், மதுரைக்குமாக சுற்றிக் கொண்டே இருக்கிறார். மதுரை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பிரச்சினைகளுக்கும் கூட அவர் குரல் கொடுத்தவண்ணம் இருக்கிறார்.

இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் உள்ள 39 எம்.பிக்களில் "தி பெஸ்ட்" என்றால் அது சு. வெங்கடேசனாகத்தான் இருக்க முடியும். ஆனால் பெரும்பாலான எம்.பிக்கள் என்ன செய்கிறார்கள் என்றே மக்களுக்குத் தெரியவில்லை. சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் சமூக வலைதளங்களில்  ஆக்டிவாக இருப்பவர். ஆனால் அவர் எதிர்பார்ப்புக்கேற்ப இறங்கிச் செயல்படுவதில்லை என்ற வருத்தம் பலரு���்கும் உள்ளது.

குறிப்பாக பெரிய அளவில் எந்தப் பிரச்சினைக்காகவும், அவர்யாரையும் போய்ப் பார்ப்பதில்லை. தொகுதிப் பிரச்சினைக்காகக்கூட பெரிய அளவில் எதுவும் செய்வதில்லை என்ற குறையும் சுட்டிக் காட்டப்படுகிறது. ஏன் ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சூடு பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்  வேர்ட்லி விளையாடியது பெரும் சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்திற்கு கார்த்தி சிதம்பரம் வந்திருந்தார். அப்போது ராகுல் காந்தி நாடாளுமன்ற காங்கிரஸ் அலுவலகத்திற்கு செல்லவந்தார். வழியில் தன்னை எதிர்கொண்டோரிடம் கை குலுக்கியபடி சென்ற ராகுல் காந்தி,  கார்த்தி சிதம்பரம் கை குலுக்க கையை நீட்டினார். அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், லேசாக பிடித்து விட்டு எதுவும் பேசாமல் விலகிப் போய் விட்டார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியிடமிருந்து இப்படி ஒரு ட்ரீட்மென்ட்டை எதிர்பார்க்கவில்லை கார்த்தி சிதம்பரம். இதனால் பெருத்த ஏமாற்றத்துடன் ராகுல் காந்தியுடன் உள்ளே செல்லாமல் அப்படியே கீழே இறங்கி விட்டார் கார்த்தி சிதம்பரம்.

என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. ராகுல் காந்தி ஏன் கார்த்தி சிதம்பரத்திடம் எதுவும் பேசாமல் போனார் என்பதும் புரியவில்லை.