பிரதமர் மோடியைப் போல எனக்கு ஒரு பரமாத்மா இல்லாம போயிட்டாரே.. ராகுல் காந்தி கிண்டல்

Su.tha Arivalagan
Jun 12, 2024,05:17 PM IST

மலப்புரம்: கேரள மாநிலத்திற்கு வந்த வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, தான் வயநாடு தொகுதியில் நீடிப்பதா அல்லது ரேபரேலி தொகுதி எம்.பியாக இருப்பதா என்பது குறித்து குழப்பத்தில் உள்ளதாகவும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் மோடிக்கு வழிகாட்ட பரமாத்மா இருப்பது போல தனக்கு யாரும் இல்லையே என்று கிண்டலாக பேசினார்.


காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். அதேபோல உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியிலும் அவர் போட்டியிட்டார். இரண்டிலுமே மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


இந்த நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு  நன்றி சொல்வதற்காக அங்கு வந்தார் ராகுல் காந்தி. மலப்புரம் நகரில் அவர் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். பின்னர் ராகுல்காந்தி மக்களிடையே பேசினார். அப்போது அவர் பேசுகையில், எனக்கு ஒரு குழப்பம் உள்ளது. நான் வயநாடு எம்.பியாக இருப்பதா அல்லது ரேபரேலி தொகுதி எம்.பியாக இருப்பதா என்பதே அந்தக் குழப்பம். துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் நரேந்திர மோடி போல எனக்கு எந்த பரமாத்மாவின் வழிகாட்டலும் இல்லை. எனக்கு கடவுளின் வழிகாட்டல் கிடைக்காமல் போய் விட்டது. காரணம், நான் சாதாரண மனிதன். பிரதமர் போல இல்லை நான். 




மோடிக்குத்தான் பரமாத்மா வித்தியாசமான உத்தரவுகளை பிறப்பிக்கிறார், வழி நடத்துகிறார். அதானிக்கு மட்டுமே எல்லாவற்றையும் கொடுக்க பரமாத்மா மோடிக்கு வழிகாட்டுகிறார். நான் சாதாரண மனிதன் என்பதால் எனக்கு வழி காட்ட மறுக்கிறார். எனக்கு மக்கள்தான் கடவுள். வயநாடு மக்களும், ரேபரேலி மக்களும்தான் எனது கடவுள். எனவே எனது குழப்பத்தைத் தீர்க்க அவர்களிடமே இதை விட்டு விடுகிறேன். அவர்கள் எனக்கு சரியான வழி காட்டுவார்கள் என்றார் ராகுல் காந்தி.


லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு டிவிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியின்போது நான் பயலாஜிக்கலாக பிறக்கவில்லை என்று கருதுகிறேன். ஏதோ ஒரு காரியத்திற்காக என்னை கடவுள்தான் இங்கு அனுப்பி வைத்திருக்கிறார். என் மூலமாக ஏதோ செய்ய அவர் விரும்புகிறார் என்று கூறியிருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.