வினேஷ் விட்டுக் கொடுப்பவர் அல்ல.. வீறு கொண்டு மீண்டும் களம் காண்பார்.. ராகுல் காந்தி நம்பிக்கை

Su.tha Arivalagan
Aug 07, 2024,02:32 PM IST

டெல்லி: இந்தியாவின் மகள் வினேஷ் போகத். அவர் அத்தனை சீக்கிரம் விட்டுக் கொடுக்க மாட்டார். மீண்டும் வீறு கொண்டு களம் காண்பார். அவருக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நீதி பெற்றுத் தரும் என்று நம்புகிறோம் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கூடுதல் எடையுடன் இருந்த காரணத்திற்காக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலால் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்த விவகாரம் இன்று லோக்சபாவிலும் எதிரொலித்தது.




இந்த நிலையில் வினேஷ் போகத் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்த கருத்து:


இந்தியாவின் பெருமையான வினேஷ் போகத் பல்வேறு உலக சாம்பியன்களை வீழ்த்தி விட்டு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். ஆனால் தொழில்நுட்ப காரணம் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் துரதிர்ஷ்டமாகும்.


இந்தியாவின் மகளான வினேஷ் போகத்துக்கு தேவையான நீதியை பெற்றுத் தருவதற்கும், இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து உரிய முறையில் மேல் முறையீிடு செய்ய இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று முழுமையாக நம்ம்புகிறோம்.

 

வினேஷ் அத்தனை சீக்கிரம் விட்டுக் கொடுப்பவர் அல்ல. அவர் மேலும் வலுவுடன் மீண்டும் வீறு கொண்டு களம் காண்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.


வினேஷ், எப்போதும் நமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். இன்றும் கூட உங்களுக்குத் துணையாக மொத்த நாடும் நிற்கிறது என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.