"விரைவில் டும் டும்".. மக்களுக்கு பதிலளித்த ராகுல் காந்தி.. முகத்துல அந்த வெட்கம்.. ஆஹா!

Meenakshi
May 13, 2024,05:46 PM IST

ரேபரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது திருமணம் குறித்து மக்கள் கேட்டதற்கு விரைவில் திருமணம் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.


மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி.  அத்தொகுதியின் இன்று தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், எங்கள் தாத்தா  ஜவஹர்லால் நேரு இங்கிருந்துதான் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினர். மக்கள் ஜவஹர்லால் நேருவுக்கு அரசியல் கற்றுத் தந்தார்கள். அவர் பிரதமராகி நாட்டுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.


அதன் பிறகு எனது பாட்டி இந்திரா காந்தியும் இங்கு இருந்து தான் வந்தார். அவர் பசுமை புரட்சியை ஏற்படுத்தினார். வங்கிகள் தேசியமயமாக்கப்படவும் நடவடிக்கை எடுத்தார். அவரை அடுத்து எனது தாயார் சோனியா காந்தியும் இங்கு இருந்து தான் மக்களவை சென்றார்.




இப்போது நான் இங்கு வந்திருக்கின்றேன். நான் அன்பின் கடையை விரித்தேன். நீங்களும் பதிலுக்கு அன்பை காட்டினீர்கள். உங்களுக்காக நான் போராடுவேன். நீங்கள் என்னை வரவேற்றதற்கு நன்றி. பிரதமரின் சம்பளம் ரூபாய் 2.5 லட்சம் தான். ஆனால் அவர் தினமும் லட்ச ரூபாய் மதிப்புள்ள சூட்டுகளை எப்படி அணிகிறார். அவருக்காக யார் சூட்டு வாங்குகிறார்கள். 


இந்தியா ஒற்றுமை யாத்திரையின் போது இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரை சந்தித்து நாட்டின் பிரச்சனைகள் குறித்து கேட்டேன். வேலையின்மை தான் தாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்று இளைஞர்கள் தெரிவித்தார்கள். விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காதது தான் நாங்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனை என்று விவசாயிகள் கூறினார்கள். போதிய ஊதியம் கிடைக்காதது தான் தாங்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனை என்று தொழிலாளர்கள் தெரிவித்தார்கள். 




ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு ஒரு லட்சம் வழங்குவோம். ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பணம் தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறினார்.  அப்போது மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதைப் பார்த்த பிரியங்கா காந்தி சிரித்தபடி, முதலில் மக்கள் ஏதோ கேட்கிறார்கள்.. அதுக்குப் பதில் சொல்லு என்று ராகுல் காந்தியிடம் கூறினார். அதைக் கேட்ட ராகுல் மைக்கைப் பிடித்து, சொல்லுங்க என்ன கேட்கறீங்க என்று மக்களைப் பார்த்துக் கேட்டார். அவர்கள் கூறியது அவருக்கு சரியாக காதில் விழவில்லை போல.


பிரியங்காவைப் பார்த்து, என்ன கேக்கறாங்க என்று கேட்டார். அதற்கு அவர் சிரித்தபடி, உனக்கு கல்யாணம் எப்பன்னு கேட்கறாங்க என்றார். அதைக் கேட்ட ராகுல் காந்தி மக்களைப் பார்த்து, வெட்கப் புன்னகையுடன், சீக்கிரம் என்று பதிலளித்தபடி அங்கிருந்து விடை பெற்றார்.