ஒரு பிரச்சினையும் செய்யாமல்.. வீட்டைக் காலி செய்வேன்.. ராகுல் காந்தி அதிரடி

Su.tha Arivalagan
Mar 28, 2023,02:37 PM IST
டெல்லி: டெல்லி துக்ளக் லேன் பகுதியில் தான் கடந்த பல வருடங்களாக தங்கியிருந்த அரசு பங்களாவைக் காலி செய்ய ராகுல் காந்தி ஒத்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக லோக்சபா செயலகத்திற்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தங்கியுள்ள துக்ளக் லேன் வீட்டைக் காலி செய்யுமாறு கூறி ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து லோக்சபா வீட்டு வசதி வாரியம் அவருக்குக் கடிதம் எழுதியிருந்தது.



இந்தக் கடிதத்திற்கு உடனடியாக ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக லோக்சபா செயலக துணைச் செயலாளர் மோஹித் ராஜனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எனது வீட்டில் தங்குவதற்கான அனுமதியை ரத்து செய்து நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. கடந்த நான்கு முறை எம்பியாக இருந்து மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த அனுமதியும், இந்த வீட்டில் தங்கியிருந்த நினைவுகளும் மறக்க முடியாதவை. 

உங்களது நோட்டீஸில் கூறியுள்ளதற்கேற்ப எந்தவித பிரச்சினயைும் இல்லாமல் அதில் நீங்கள் கேட்டுக் கொண்டதை நிறைவேற்றுவேன் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

இதன் மூலம் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்து கொடுக்க ராகுல் காந்தி முன்வந்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட் விதித்த தண்டனையை எதிர்த்து எப்போது அப்பீல்செய்யப்படும் என்று தெரியவில்லை. ஒரு மாத அவகாசம் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.