22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்.. டென்னிஸுக்கு குட்பை சொன்னார்.. ரபேல் நடால்

Su.tha Arivalagan
Oct 10, 2024,06:02 PM IST

பார்சிலோனா: டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சர்வதேச டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 


22 முறை கிராண்ஸ்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், அடுத்த மாதம் மலாகாவில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு விட்டு அத்துடன் ஓய்வு பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.




38 வயதாகும் நடால், கடந்த சீசன்களாக காயம் காரணமாக சரிவர விளஐயாடவில்லை. கடந்த வருடமே தான் 2024 இறுதியில் ஓய்வு பெறக் கூடும் என்று கூறியிருந்தார் நடால். சொன்னபடி தற்போது ஓய்வை அவர் அறிவித்துள்ளார். அவரது ஓய்வு முடிவு, நடால் ரசிகர்களை ஏமாற்றத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.


ஒற்றையர் போட்டியில் நோவாக் ஜோகோவிக்குக்கு அடுத்து சிறந்த வீரர் நடால்தான். களிமண் தரையில் சிறப்பாக விளையாடக் கூடியவரான டால், 14 முறை பிரெஞ்ச் ஒபன் ஒற்றையர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிரெஞ்சு ஓபன் போட்டியில் தான் விளையாடிய 116 போட்டிகளில் 112ல் வென்று அசத்தியவர்.


அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை நான்கு முறையும், ஆஸ்திரேலியா ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை தலா 2 முறையும் அவர் வென்றுள்ளார்.


ஒலிம்பிக் போட்டியிலும் அவர் தனது முத்திரையைப் பதித்துள்ளார். ஒலிம்பிக்கில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் தங்கம் வென்ற அவர், டேவிஸ் கோப்பையை ஸ்பெயின் வெல்ல 5 முறை உதவியுள்ளார். கடைசியாக 2019 டேவிஸ் கோப்பையை ஸ்பெயின் வென்றிருந்தது. 


கடந்த இருபது ஆண்டுகளாக டென்னிஸ் மும்மூர்த்திகளாக வலம் வந்தவர்கள் ரோஜர் பெடரர் (20 கிராண்ட்ஸ்லாம் வென்றவர் பெடரர்), ஜோக்கோவிக் மற்றும் நடால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்