விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும்.. அடித்துச் சொல்லும் ராதிகா சரத்குமார்

Meenakshi
Apr 06, 2024,11:00 AM IST

சென்னை: விரைவில் மதுரை எய்ம்ஸ் திறக்கப்படும் என்று பாஜக விருதுநகர் தொகுதி வேட்பாளர் ராதிகா சரத்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. ரூ.1264 கோடி மதிப்பில், சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில்  கட்டத் திட்டமிடப்பட்ட இந்த மருத்துவமனைக்கு, பிரதமர் மோடியும் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை. பிரதமர் பதவி ஏற்ற 2ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த நிலையில், லோக்சபா தேர்தல் தொடங்க உள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. 33 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2019ம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போது தான் பணிகள் தொடங்கியுள்ளன.


இது குறித்து விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கூறுகையில், மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை அதிகநாட்களாக கட்டப்படாமல் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். முதற்கட்டமாக எல் அன்ட் டி நிறுவனம் கட்டுமான பணிகள் எல்லாம் தொடங்கியிருக்காங்க. இன்னும் 33 மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் இந்த ஹாஸ்பிடலை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்போராரு.


திருமங்கலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ரயில்வே மேம்பால பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் அது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. கள்ளிக்குடி தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் இல்லாததினால் அந்த சாலையை கடக்க முயன்ற மக்கள் நிறைய பேர் இறந்திருக்கிறார்கள்.10 வருசமாக இங்கிருந்த எம்பி எந்த முயற்சியும் பண்ணல. நான் நிச்சயமாக அந்த மேம்பாலம் கட்டுவதற்கு உடனடியாக முயற்சி எடுப்பேன் என்று கூறியுள்ளார்.