அவதூறாகப் பேசுகிறார்.. திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது.. ராதிகா சரத்குமார் புகார்!

Manjula Devi
May 17, 2024,10:08 AM IST

சென்னை: பாஜகவின் விருதுநகர் தொகுதி வேட்பாளர் ராதிகா சரத்குமார், தன்னைப் பற்றி இழிவாக பேசி அவதூறு கருத்துக்களை பரப்புவதாக கூறி திமுகவைச் சேர்ந்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.


திமுகவைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடைப் பேச்சாளர் ஆவார். இவரது மேடைப் பேச்சு சில மாதங்களுக்கு முன்பு பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் பயன்படுத்திய வார்த்தைகள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகின. குறிப்பாக எதிர்க்கட்சியில் செயல்பட்டு வரும் தலைவர்கள், பெண்களை, கடுமையாக தாக்கி  பேசி வந்தார். அதிலும் பாஜக உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூவை பற்றி பேசிய இவரது கருத்துக்கள் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது. 




பாஜக தலைவர் அண்ணாமலை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதையடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து  போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, திமுக  உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டா். அதன் பின்னர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மன்னிப்பு கேட்டதால் மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டார்.


இந்த நிலையில், சமீபத்தில் சரத்குமார் இரவு இரண்டு மணிக்கு மனைவியை எழுப்பி தான் பாஜகவில் இணைவதாக  தெரிவித்து பின்னர் பாஜகவில் சேர்ந்ததாக பேட்டியின்போது கூறியிருந்தார். இதை வைத்து  சிவாஜி கிருஷ்ணமூர்த்தி  ஒரு கூட்டத்தில் பேசிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராதிகா சரத்குமார்

"ஏன்டா  படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா..? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே...அவங்களதான் குத்தம் சொல்லணும்.. உன்ன மாதிரி ஆள் எல்லாம் கடுமையாக தண்டிக்கணும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.


இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்போது தன்னைப் பற்றி இழிவாக பேசியதற்காக, அவர்  மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் ராதிகா சரத்குமார்.