புஷ்பா 2: The Couple Song.. நாளை ரிலீஸ்.. 6 மொழிகளிலும் ஸ்ரேயா கோஷல்தான்!

Meenakshi
May 28, 2024,04:25 PM IST

சென்னை: புஷ்பா 2 படத்தின் 2வது பாடல் நாளை வெளியாகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின்  டீசர் கடந்த மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் டீசர் மற்றும் முதல் சிங்கிளான 'புஷ்பா...புஷ்பா' பாடல் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை இன்னும் இரண்டு மடங்காக்கியுள்ளது. 'புஷ்பா: தி ரூல்' படத்தின்  இரண்டாவது சிங்கிள் 'சூடானா...(கப்புள் பாடல்)' அறிவிப்பு ராஷ்மிகா இருக்கும் புரோமோவுடன் வெளியாகியுள்ளதால் ரசிகர்க உற்சாகமாகியுள்ளனர். 




படப்பிடிப்பு தளத்தில் இருந்து ராஷ்மிகா, ஸ்ரீவள்ளியாக மாறும் சுவாரஸ்யமான காட்சிகளுடன் இந்த புரோமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. தற்போது இந்த பாடல் நாளை வெளியாக உள்ளதாக கூறி ஒரு போஸ்டரை வெளியிட்டு மேலும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளது படக்குழு.


'புஷ்பா1' படத்தில் புஷ்பா மற்றும் ஸ்ரீவள்ளி கதாபத்திரங்களுக்கு இடையேயான காதல் பாடலாக 'சாமி ஓ சாமி' ஹிட்டடித்தது. அதே போன்ற காதல் பாடலாக 'சூடானா...' இருக்கும் என இந்த புரோமோ உறுதியளிக்கிறது. இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சந்திரபோஸ் பாடலை எழுதியுள்ளார். படத்தின் இசை உரிமையை டி-சீரிஸ் கைப்பற்றியுள்ளது. 


இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். புஷ்பா 2 படத்துக்காக தேவிஸ்ரீ பிரசாத் இசையில் இந்த பாடலை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி என 6 மொழிகளில் பாடியுள்ளார் ஸ்ரேயோ கோஷல்.


புஷ்பா2 தி ரூல் படத்தில் இருந்து வெளியான 'புஷ்பா புஷ்பா' பாடல் சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கானது. அல்லு அர்ஜூன் புஷ்பாவாக நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும், அல்லு அர்ஜூனின் தோற்றமும் ரசிகர்களை வசீகரித்து கமர்ஷியல் படத்திற்கான எல்லா விஷயங்களும் இதில் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது. புஷ்பா 1ஐ விட புஷ்பா 2 பட்டையை கிளம்பும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.