73 வயது மூதாட்டியை... சரமாரியாக தாக்கிய மகன், மருமகள், பேரன்.. மனிதர்களா இவர்கள்!

Su.tha Arivalagan
Oct 29, 2023,09:57 PM IST

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 73 வயதான மன நலம் சரியில்லாத மூதாட்டியை அவரது வக்கீல் மகன், மருமகள், பேரன் ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சொந்த மகனே இப்படி வெறித்தனமாக தாக்கியதால் நிலை குலைந்து போய் விட்டார் அந்தத் தாய். அந்த வக்கீலுடன் சேர்ந்து கொண்டு அவரது மனைவியும், பேரனும் சேர்ந்து பாட்டியை அடித்ததுதான் மிக மிக மோசமான அதிர்ச்சியைக் கொடுப்பதாக உள்ளது.


இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து போலீஸார் தற்போது அந்த வக்கீலைக் கைது செய்துள்ளனர். தான் மாட்டிய சிசிடிவி கேமராவாலேயே அந்த வக்கீல் போலீஸிடம் சிக்கியுள்ளார்.




பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் பகுதியில் வசித்து வருபவர்தான் ஆஷா ராணி. இவரது மகன்தான் வக்கீலான அங்குர் வர்மா. இவரது வீட்டில்தான் ஆஷா ராணி வசித்து வருகிறார். சமீபத்தில் தன்னைப் பார்க்க வந்த தனது மகள் தீப்ஷிகாவிடம், தன்னை அங்குர் வர்மாவும், அவரது மனைவி சுதாவும் கொடுமைப்படுத்துவதாக கூறி அழுதுள்ளார் ஆஷா ராணி. இதைக் கேட்டு வருத்தமடைந்த தீப்ஷிகா, அந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய டேப்பை அங்குர் வர்மாவுக்குத் தெரியாமல் எடுத்து வந்து தனது வீட்டில் போட்டுப் பார்த்துள்ளார்.


அப்போது அதில் அவர் கண்ட காட்சிகள் அவரது இதயத்தையே நொறுங்க வைத்து விட்டது. மகனாக இல்லாமல் ஒரு மூர்க்கனாக மாறி தனது தாயைக் கொடுமைப்படுத்தியுள்ளார் அங்குர் வர்மா என்பது அந்த வீடியோ காட்சி மூலம் தெரிய வந்து அதிர்ந்து போனார் தீப்ஷிகா.


அதில் ஒரு  காட்சியில், ஆஷா ராணியின் பேரன், அவர் படுத்திருந்த படுக்கையில் தண்ணீரை ஊற்றி விட்டு, பாட்டி சிறுநீர் கழித்து விட்டதாக தனது பெற்றோரிடம் போய் கூறுகிறான். இதைக் கேட்டு ஓடி வரும் அங்குர் வர்மாவும், சுதாவும், ஈவு இரக்கமே இல்லாமல் ஆஷா ராணியை சரமாரியாக அடிக்கிறார்கள். முதுகிலேயே குத்துகிறார்கள். சரமாரியாக கன்னத்தில் அறைகிறார்கள்.  


வலி தாங்க முடியாமல் ஆஷா ராணி அலறித் துடிக்கிறார். கிட்டத்தட்ட ஒரு நிமிடம் இந்த தாக்குதல் நடக்கிறது. பிறகு அங்குர் போய் விடுகிறார். அதன் பின்னர் ஆஷா ராணி தலைமுடியைப் பிடித்து சுதா பலமாக உலுக்குகிறார்.  தலையிலும் அடிக்கிறார். அவருடன் அவரது மகனும் சேர்ந்து தாக்குகிறான். பிறகு அங்குர் வருகிறார். இப்போது சுதாவும், மகனும் போய் விடுகிறார்கள். அங்குர் தனது தாயாரை முரட்டுத்தனமாக அடிக்கிறார்.


பிற காட்சிகளை வர்ணிக்க முடியாது. செப்டம்பர் 19, அக்டோபர் 21, அக்டோபர் 24 ஆகிய தேதிகளில் நடந்த சம்பவங்கள் அதில் பதிவாகியிருந்தன. இந்தக் காட்சிகளைப் பார்த்து வெகுண்டு போன தீப்ஷிகா,  ஒரு என்ஜிஓ அமைப்பின் உதவியுடன் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து  ஆஷா ராணியை மீட்டனர். அங்குர் வர்மா கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


என்ன மனிதர்களோ இவர்கள் எல்லாம்... விசாரணையே இல்லாமல் தூக்கிலிடப்பட வேண்டியவர்கள் இவர்கள்.