சிப்ஸ் பாக்கெட்டிலிருந்து கூலிங் கிளாஸ்.. புனே நிறுவனத்தின் "கூல் கூல்" கண்டுபிடிப்பு!

Su.tha Arivalagan
Feb 18, 2023,10:01 AM IST
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, சாதாரண சிப்ஸ் பாக்கெட்டுகளைப் பயன்படுத்தி கூலிங் கிளாஸைத் தயாரித்து அசத்தியுள்ளது. உலகின் முதல் ரீசைக்கிள் செய்யப்பட்ட கூலிங் கிளாஸ் இதுதான் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் அனீஷ் மல்பானி கூறியுள்ளார்.



பார்க்கவே அழகாக இருக்கும் இந்த கூலிங் கிளாஸை அறிமுகப்படுத்தி டிவீட் போட்டுள்ளார் அனீஷ் மல்பானி.  இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தயாரிப்புகளிலேயே இதுதான் சற்று கடினமானது. ஆனால் இறுதியாக இது உலகின் முதலாவது ரீசைக்கிள் செய்யப்பட்ட  கூலிங் கிளாஸ் என்ற பெருமையுடன் உருவாகி விட்டது. தூக்கி வீசப்படும் சாதாரண சிப்ஸ் பாக்கெட்களைப் பயன்படுத்தி இதைத் தயாரித்துள்ளோம். இந்தியாவின் பெருமையாக இது மாறியுள்ளது என்றார் அவர்.


மகா சிவராத்திரி விழா : தமிழகத்தில் முக்கிய கோவில்கள் இன்று இரவு திறந்திருக்கும்!


இவரது நிறுவனத்தின் பெயர் அஷாயா வித்தவுட் என்பதாகும். இந்த நிறுவனம்தான் இந்த வித்தியாசமான கூலிங்கிளாஸைத் தயாரிக்கிறது. சாக்கலேட் பேப்பர்கள், பால் பாக்கெட்கள், சிப்ஸ் பாக்கெட்கள் என  தூக்கி வீசிப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்களை சேகரித்து அதை ரீசைக்கிள் செய்து இந்த கூலிங் கிளாஸை தயாரித்துள்ளனர். 

இந்தப் பணிக்காக பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் இருவரை தங்களது நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளனர். அவர்களின் உதவியுடன் இந்த கூலிங் கிளாஸ் தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். இந்த கண்ணாடிகள் அல்ட்ரா வயலட் கதிர்வீச்சை தாங்கக் கூடியதாகும். எளிதில் உடையாது.  கையாளுவதற்கு எளிமையானது என்றும் அனீஷ் மல்பானி கூறியுள்ளார். இதில் க்யூ ஆர் கோடும் உள்ளது. அதைப் பயன்படுத்தி, எத்தனை சிப்ஸ் பாக்கெட்களை கொண்டு அந்தக்  கண்ணாடி தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாமாம்.