வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக.. புதுக்கோட்டையில் நடந்த தேநீர் மொய் விருந்து!

Meenakshi
Aug 12, 2024,03:51 PM IST

புதுக்கோட்டை:   வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு தேநீர் மொய் விருந்து நடத்தி நிதி திரட்டியுள்ளார் சிவக்குமார் என்ற தேநீர் கடை உரிமையாளர்.


கேரள மாநிலம் வயநாட்டில், முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் 29ம் தேதி இரவில் நிலச்சரிவு ஏற்பட்டது.  இந்த நிலச்சரிவில் 3 கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்து 400க்கும் அதிகமானோர் இறந்தனர். 273 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 138 பேரை காணவில்லை. தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. 




150க்கும் மேற்பட்டவர்களின்  உடல் பாகங்கள்  மட்டும் கிடைத்துள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடையாளம் கண்டு பிடிக்கப்பட்ட உடல் பாகங்கள் உறவினர்களிடம் வழங்கப்பட்டும், அடையாளம் தெரியாத உடல் பாகங்கள் மொத்தமாக தகனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்திய மக்கள் அனைவரையும் கதிகலங்கச் செய்துள்ளது. 1000த்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்தது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழில் அதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், திரைப்பிரபலங்கள், தன்னார்வலர்கள்  உள்ளிட்டோர் நிவாரண உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு உதவும் பொருட்டு புதுக்கோட்டையைச் சேர்ந்த டீக்கடைக்காரர் மொய் விருந்து நடந்தி பணம் சேகரித்து வருகிறார். இவரின் செயல் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே டீக்கடை நடத்தி வருபவர் தான் சிவக்குமார். இவர் கொரோனா பாதிப்பு, மழை பாதிப்புகளின் போது  மொய் விருந்து நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறார். அதன்படி, தற்போது வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு உதவும் பொருட்டு மொய் விருந்து நடந்தியுள்ளார். இந்த மொய் விருந்தில் அவ்வூர் மக்கள் கலந்து கொண்டு சிவக்குமாருக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். அதே மாவட்டத்தை சேர்ந்து சபரி என்ற 7ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ரூ.5000 மொய் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்