59 வயது குரூரன்.. "எங்க கிட்ட அவனைக்  கொடுங்க".. கொதித்துக் கொந்தளிக்கும் புதுச்சேரி!

Su.tha Arivalagan
Mar 06, 2024,07:30 PM IST

புதுச்சேரி:  புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்துள்ள அக்கிரமம், பெண்ணைப் பெற்ற ஒவ்வொருவரையும் கொதிக்க வைப்பதாக உள்ளது. இந்த வன்கொடுமையில் ஈடுபட்டுக் கைதாகியுள்ள ஒரு நபரைப் பார்க்கும்போதுதான் வயிறு எரிகிறது. அந்த கொடூரனுக்கு வயது 59 வயதாகிறது என்பதுதான் பேரதிர்ச்சி.


பேத்தி வயதுடைய அந்த பிஞ்சுக் குழந்தையை நாசப்படுத்த இந்த கொடூரனுக்கு எப்படி மனசு வந்தது என்று தெரியவில்லை.. என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்ற வெறுப்பை நமக்குள் ஏற்படுத்திகிறது.


"அவனைக் கூட்டியாந்து எங்க கிட்ட விடுங்க சார்.. அடிச்சே கொல்றோம்.. அவனெல்லாம் உயிரோடயே இருக்கக் கூடாது" என்று பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆவேசமாக பேசும்போது அந்த ஆவேசம் நமக்கும் தொற்றிக் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.




59 வயதாகும் விவேகானந்தனும்.. (பெயரைப் பாருங்கள் - விவேகானந்தன்.. எப்படிப்பட்ட மகானின் பெயர் இது!).. இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளார். முத்தியால்பேட்டையைச் சேர்ந்த நாராயணனின் மகள்தான் இந்த சிறுமி. 9 வயதாகும் இவர் 5ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவ நாளன்று அதாவது மார்ச் 2ம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மகளை ரொம்ப நேரமாகக் காணாததால் பதறிப் போன நாராயணன், தேடிப் பார்த்துள்ளார் கிடைக்கவில்லை. உறவினர்களும் நாலா பக்கமும் தேடியுள்ளனர். குழந்தை கிடைக்கவில்லை என்பதால், போலீஸில் புகார் தரப்பட்டது. 


போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். உறவினர்களும் போராட்டத்தில் குதித்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் சோலைநகர் பகுதியில் கண்ணதாசன் வீதி - அம்பேதகர் வீதி இடையே செல்லும் கழிவுநீர்க் கால்வாயில் ஒரு இடத்தில் வேட்டியில் கட்டி மூட்டை போல குழந்தையை கால்வாயில் பிணமாக வீசியிருந்தது தெரிய வந்தது. அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர். பிரேதப் பரிசோதனையில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.


சிசிடிவி பதிவுகளை வைத்து மொத்தம் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். அதில் கருணாஸ் என்பவரும், விவேகானந்தனும் இருவர். மற்றவர்கள் மைனர் வயது கொண்ட சிறார்கள். அனைவரும் கஞ்சா போதையில் இந்த அக்கிரமத்தைச் செய்துள்ளனர்.  இதில் கருணாஸின் வயது 19 ஆகும். இவன் கொடுத்த வாக்குமூலத்தில் இந்தக் கொடுமையை முதலில் செய்தது விவேகானந்தன் என்று கூறி அதிர வைத்துள்ளான். 59 வயதான விவேகானந்தனின் இந்த கொடூர புத்திதான் மக்களை கொதிக்க வைத்துள்ளது.


பெற்றோர்களே, பிள்ளைகளை மிக மிக பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். தனியே விடவே விடாதீர்கள். கண்காணிப்பிலேயே இருங்கள்.. வேறு வழியில்லை.. அயோக்கியர்கள் அதிகரித்து விட்டார்கள்.. போதைப் பழக்கம் மக்களை குரூரர்களாக்கி வருகிறது. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். நம் பிள்ளைகளின் பாதுகாப்பும், நலனும் நம்மிடம் இருந்துதான் முதலில் தொடங்க வேண்டும். கவனம்.