புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு.. வேட்டியால் கழுத்தை நெரித்துக் கொள்ள முயன்ற விவேகானந்தன்!

Meenakshi
Mar 11, 2024,12:27 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான முதியவர் விவேகானந்தன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.


புதுச்சேரி முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி ஆர்த்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமி வெகு நேரமாகியும் காணவில்லை என சிறுமியின் பெற்றோர் அப்பகுதியை சுற்றியும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால், அவரது பெற்றோர் முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசாரும் பல இடங்களில் சிறுமியை தேடியுள்ளனர்.  


இறுதியில், சிறுமியின் உடல் அவரது வீட்டில் இருந்து 100 மீட்டார் தொலைவில் உள்ள ஒரு சாக்கடையில் சிறுமியின்ந் உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இவ்வழக்கை விசாரித்த போலீசார் 2 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். விவேகானந்தன் என்ற 59 வயதுடைய நபரும், கருணாஸ் என்ற 19 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்த நிலையில், சிறையில் கருணாஸ், விவேகானந்தன் இருவரையும் மற்ற விசாரணை கைதிகளுடன் அடைத்தால் பிரச்சனை வரும் என்பதால் தனி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் குற்றவாளி விவேகானந்தன் தனது வேட்டியால் கழுத்தை நெரித்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


சக கைதியான கருணாஸ் சத்தம் போடவே சிறை வார்டன் ஓடி வந்து காப்பாற்றி எச்சரித்தார். இதற்கிடையே, இருவரையும் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, முத்தியால்பேட்டை போலீசார் இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.