புதுச்சேரி  முதல்வர் ரங்கசாமியை மதிக்காத.. தீபிகா ஐபிஎஸ்.. காஷ்மீருக்கு இடமாற்றம்!

Su.tha Arivalagan
Feb 24, 2023,11:03 AM IST

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்களை மதிக்காமல் அலட்சியமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி தீபிகா அதிரடியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல இன்னொரு ஐபிஎஸ் அதிகரியான லோகேஷ்வரன் மிஸோரமுக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இந்த அதிகாரிகளுக்குப் பதில் மிஸோரம் மற்றும் டெல்லியிலிருந்து இரு ஐபிஎஸ் அதிகாரிகள் புதுவைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


நாடு முழுவதும் 8 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் செயலாளர் ராகேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். அதில் 2018ம் ஆண்டு பேட்ச்சைச் சேர்ந்த தீபிகா ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது சமீபத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. 





முதல்வர் ரங்கசாமிக்கு மதிப்பு தருவதில்லை. அமைச்சர்களையும் மதிப்பதில்லை, உரிய மரியாதை தருவதில்லை, அலட்சியமாக நடக்கிறார் என்று என்.ஆர். காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியது. மேலும் இதுதொடர்பாக உள்துறை அமைச்சருக்கும் புகார்கள் போயின.


புதுச்சேரி சிறப்பு எஸ்.பியாக இருந்து வந்தார் தீபிகா. அவர் மீதான புகார்களைத் தொடர்ந்து அதிரடியாக அவரை ஜம்மு காஷ்மீருக்கு மாற்றியுள்ளனர்.


அதேபோல புதுச்சேரியைச் சேர்ந்த இன்னொரு ஐபிஎஸ் அதிகாரியான லோகேஷ்வரன் மிஸோரமுக்கு மாற்றப்பட்டஉள்ளார். அவருக்குப் பதில் மிஸோரமிலிருந்து குலோத்துங்கன் மற்றும் டெல்லியிலிருந்து பிரிஜேந்திர குமார் யாதவ் ஆகியோர் புதுவைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.