புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு...கைதானவர் சிறையில் தற்கொலை

Meenakshi
Sep 16, 2024,02:07 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் கைதான குற்றவாளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


புதுச்சேரி முத்தியால் பேட்டை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயதுடைய சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டு சாக்கு முட்டையில் கட்டி சாக்கடையில் சடலமாக வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து போலீசார் சடலமாக சிறுமியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஏழு பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதில் 5 பேர் மைனர் வயதுடையவர்கள் என்று தெரிகிறது. மற்ற இருவரில், ஒருவன் கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் விவேகானந்தன் 59 வயது ஆகிய இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தது தெரிய வந்தது. 


கருணாஸ் தான் சிறுமியை ஐஸ்கிரீம் தருவதாக கூறி அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. பிறகு இவர்கள் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளனர். பிறகு தான் கட்டியிருந்த வேட்டியைக் கழற்றி அதில் குழந்தையின், கை, கால்களைக் கட்டி மூட்டை போல கொண்டு போய் கால்வாயில் போட்டுள்ளார் விவேகானந்தன். கருணாஸும், விவேகானந்தனும் மிதமிஞ்சிய கஞ்சா போதையில் இருந்துள்ளனர். போலீஸார் கைது செய்தபோது கூட கருணாஸ் மிக மோசமான போதையில் இருந்துள்ளான் என்று கூறப்படுகிறது. குழந்தையை கொடூரமாக இவர்கள் சித்திரவதை செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. 




சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு விட்ட போதிலும் கூட புதுச்சேரி முழுவதும் வீடுகள் தோறும் இந்த சம்பவம்தான் மக்களை பெரும் சோகத்திலும், கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த அந்த கொடூரர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், உறவினர்கள், என அனைவரும் ஒன்று திரண்டு புதுச்சேரி கடற்கரையில் போராட்டத்தில் குதித்தனர். மேலும், சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கும் ஆதரவாக வாதாட மாட்டோம் என புதுச்சேரி வழக்கறிஞர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.


இந்நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருமே சிறையில் தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால், சிறையில் இவர்களை சிறைகாவலர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இருப்பினும் விவேகானந்தன் தொடர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். பல வகைகளில் தொடர்ந்து அவர் தற்கொலை முயற்சி செய்து வந்த நிலையில் காவலர்கள் அவரை மீட்டு பாதுகாப்பு அளித்து வந்தனர். 

இந்நிலையில், இன்று சிறை கழிப்பறையில் விவேகானந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய சிறை அதிகாரிகள் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை நாளை தொடங்க உள்ள நிலையில், கொலை குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்.