புதுச்சேரி.. துணை நிலை ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்து.. புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

Su.tha Arivalagan
Jan 24, 2024,12:11 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனின், குடியரசு தின விழா தேனீர் விருந்தை திமுக புறக்கணிக்கும் என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், யூனியன் பிரதேச திமுக தலைவருமான இரா. சிவா அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக இரா சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:




சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் துணைநிலை ஆளுநர் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேனீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேனீர் விருந்துகளில் நானும் எங்கள் கழக சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று உள்ளோம். 


ஆனால் சமீபகாலமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை என்பது பாஜக கொடி கட்டாத அலுவலகமாகவும், ஆளுநர் பாஜக தலைவர் போலும் செயல்படுகிறார். இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்.


ஆகவே, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் அவர்கள் விடுத்துள்ள குடியரசு தின விழா தேனீர் விருந்து அழைப்பை புதுச்சேரி மாநில திமுக புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டிலும் ஆளுநர் அளிக்கும் தேனீர் விருந்து நிகழ்ச்சிகளை ஆளும் திமுக புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இரு மாநிலங்களிலும் ஆளுநருக்கும், திமுகவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை. புதுச்சேரியில் ஆளும் என். ஆர். காங்கிரஸ் கட்சி, பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுடன் ஒத்துப் போய் செயல்படுவது நினைவிருக்கலாம்.