பாஜக அமைச்சரின் இலாகாவைத் தூக்கி .. என்ஆர் காங் அமைச்சருக்கு கொடுத்த முதல்வர் ரங்கசாமி

Manjula Devi
Jul 31, 2024,07:55 PM IST

புதுச்சேரி:   புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் சார்பாக அமைச்சராக நியமிக்கப்பட்ட திருமுருகனுக்கு இன்று  இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே சமயம் பாஜக அமைச்சர் சாய் சரவண குமாரின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டு முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். டெல்லி வரை சென்று ஆட்சியில் இருந்து விலகி வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும் என பாஜக மேலிடத்தை வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக மேலிடத்திலிருந்து என் ஆர் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை. 




இந்த நிலையில் புதுச்சேரியில் அமைச்சரவையில் சிறிய மாற்றம் நடந்துள்ளது. என் ஆர் காங்கிரஸ் சார்பாக கடந்த மார்ச் மாதம் அமைச்சராக திருமுருகன் பதவியேற்றார். ஆனால் திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இன்று அவருக்கு குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 


இந்த துறையை இதுவரை பார்த்து வந்தவர் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சாய் சரவண குமார். அவருக்கு புதிதாக, ஆதி திராவிடர் நலன், சிறுபான்மையினர் நலன் மற்றும் தீயணைப்புத்துறை  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.