தவெக முதலாமாண்டு கொண்டாட்டத்தில்.. கலந்து கொள்ள.. புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமிக்கு அழைப்பு!

Manjula Devi
Feb 24, 2025,06:14 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா மிக பிரம்மாண்டமாக வரும் புதன்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி  2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் நோக்கோடு பல்வேறு பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். இதில் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்து முடித்துவிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


மறுபக்கம் தமிழக வெற்றி கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் அக்கட்சி ஆண்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். அத்துடன் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தையும் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




அதன்படி தவெகவின் முதலாம் ஆண்டு விழா வரும் 26 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்விழாவினை சிறப்பாக நடத்தி முடிக்க 18 குழுக்களை நியமித்துள்ளது கட்சி தலைமை.


இந்த சிறப்பு குழுக்கள் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள தவெக ஆண்டு விழாவை மிக பிரமாண்டமாகக் நடந்த  பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இதில் கலந்து கொள்ளும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சிறப்பு விருந்தினர்கள், என 3000 பேருக்கு தடபுடலான விருந்து சாப்பாடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் மேலும் விஜயை பார்க்க ரசிகர்கள், மற்றும் தொண்டர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதால் விரிவான போலீஸ் பாதுகாப்பும் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  


சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரும் வழி முழுவதும் விஜயை வரவேற்க தலைவரே வருக, எதிர்காலமே வருக, தமிழ்நாட்டின் முதலமைச்சரே வருக என விஜய்யை புகழக் கூடிய வகையில் பல்வேறு கட்அவுட்டுகளும் பேனர்களும் இடம்பெற்றுள்ளன.


அனல் பறக்கப் போகும் அரை மணி நேரப் பேச்சு




முன்னதாக விக்கிரவாண்டி சாலையில் நடைபெற்ற மாநாட்டில் விஜயின்  அனல் தெறிக்கும் பேச்சின் அலை  பல்வேறு கட்சிகளிலும் பரவியது. இதனையடுத்து நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ள தவெகவின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் விஜய் 30 நிமிடம் பேச இருப்பதாகவும், அந்த 30 நிமிட பேச்சும் அரசியல் சார்ந்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் தவெகவின் முதலாமாண்டு விழாவில்  ஏற்கனவே அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொள்ள உள்ள நிலையில் புதுச்சேரியின் முதல்வரும், என் ஆர் காங்கிரஸ் தலைவருமான ந.ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் ந.ரெங்கசாமி ஏற்கனவே விஜய் தனது நெருங்கிய நண்பர் எனக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனால் நாளை மறுதினம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள இந்த விழாவில் விஜயின் பேச்சு, ஏற்பாடுகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருவதுடன் அடுத்த சம்பவம் காத்திருக்கு எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.