Puducherry Chandra Priyanka: சந்திரபிரியங்கா ராஜினாமா இன்னும் ஏற்கப்படலையாமே?

Su.tha Arivalagan
Oct 19, 2023,02:11 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அவரது ராஜினாமா கடிதம் நிலுவையில் உள்ளதாம்.


புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபிரியங்கா. மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்தவரான சந்திரகாசுவின் மகள்தான் சந்திர பிரியங்கா. இவர் தற்போது என்ஆர் காங்கிரஸ் கட்சியில் காரைக்கால் நெடுங்காடு தொகுதி சட்டசபை உறுப்பினராக இருக்கிறார்.




ரங்கசாமி அரசு பதவியேற்றபோது அவரது அமைச்சரவையில் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக  நியமிக்கப்பட்டார் சந்திர பிரியங்கா. மக்களின் அபிமானத்தைப் பெற்று சிறப்பாக செயல்பட்டும் வந்தார். குழந்தைகளுடன் ஜாலியாக பேசுவது, மாணவர்களுடன் இயல்பாக கலந்துரையாடுவது, தனது பிள்ளைகளுக்கு தனது அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே பாடம் சொல்லித் தருவது என்று சுறுசுறுப்பாக வலம் வந்த அமைச்சர்தான் சந்திர பிரியங்கா.


இந்த நிலையில் கடந்த 10ம் தேதி திடீரென  தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் சந்திர பிரியங்கா. ஜாதி ரீதியாகவும், ஆணாதிக்க ரீதியாகவும் தன்னை பாரபட்சமாக நடத்துவதாக கூறி நீண்டதொரு கடிதத்தையும் எழுதியிருந்தார்.  மேலும் தனது இடத்திற்குப் புதிய அமைச்சரை நியமிக்கும்போது வன்னியர் அல்லது பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரையே நியமிக்க வேண்டும். வேறு ஜாதியினர் நியமிக்கப்படக் கூடாது என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.


அவரது ராஜினாமா கடிதம் முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதை துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம்தான் இறுதி முடிவு எடுக்க முடியும். அந்தவகையில்,துணை நிலை ஆளுநர், மத்தியஉள்துறை அமைச்சகத்திற்கு சந்திர பிரியங்காவின் கடிதத்தை அனுப்பி வைத்ததாக தெரிகிறது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர்தான் அவரது ராஜினாமா ஏற்கப்படும். ஆனால் இதுவரை உள்துறை அமைச்சகம் இந்த கடிதம் மீது நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.




சந்திரபிரியங்காவும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தன்னை அமைச்சராகவே இன்னும் அடையாளப்படுத்தி வருகிறார். அந்த வாசகங்களை அவர் நீக்கவில்லை. மேலும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அதேபோல புதுச்சேரி அரசு இணையதளப் பக்கத்திலும் கூட சந்திர பிரியங்காவின் பெயர் நீக்கப்படவில்லை. சட்டப்படி சந்திர பிரியங்கா அமைச்சராகவே தொடர்கிறார். 


அவர் மீண்டும் அமைச்சராக நீடிப்பாரா, சமரசப் பேச்சுவார்த்தைகள் நடக்கிறதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. ஒருவேளை அவர் கூறியிருந்த புகார்கள் குறித்து மத்திய அரசு விசாரித்து வருகிறதா என்றும் தெரியவில்லை. ஒரு விதமான குழப்ப நிலையே நீடிக்கிறது.