இந்தியா கூட்டணியின் பந்த் அழைப்பு.. ஸ்தம்பித்தது புதுச்சேரி.. கடைகள், தியேட்டர்கள் மூடல்!

Su.tha Arivalagan
Sep 18, 2024,10:31 AM IST

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


புதுச்சேரியில் வருடா வருடம் ஏப்ரல் 1ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்படும்.  இருப்பினும் கடந்த ஏப்ரல் மாதம் மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரவில்லை. லோக்சபா தேர்தல் வந்ததால் மின் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜூன் 16ம் தேதி முதல் புதிய மின் கட்டண விகிதங்கள் அமலுக்கு வந்தன. 




அதன்படி வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 75 பைசா உயர்த்தப்பட்டது. முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். அதற்குப் பயன்படுத்தப்படும்  மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.25 என்பதிலிருந்து ரூ. 2.70 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த மின்கட்டண உயர்வுக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


இதையடுத்து புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று காலை முதல் மாலை வரை பந்த் போராட்டம் நடைபெறுகிறது. பந்த்தையொட்டி அனைத்துக் கடைகள், ஜவுளி நிறுவனங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் ஓடவில்லை. அரசுப் பேருந்துகளும் சரிவர ஓடவில்லை. ஆட்டோ, டாக்சி என எதுவுமே செயல்படவில்லை.




புதுச்சேரி பந்த்தையொட்டி புதுச்சேரிக்கு வரும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் உள்ளிட்டவை எல்லைப் பகுதிகளான கோரிமேடு உள்ளிட்ட இடங்களோடு நிறுத்தி பயணிகளை இறக்கிச் செல்கின்றன. அங்கிருந்து புதுச்சேரிக்குள் வருவதற்கு மக்கள் பெரும் திண்டாட்டத்திற்குள்ளாகியுள்ளனர்.


புதுச்சேரி பந்த்தைத் தொடர்ந்து புதுச்சேரி முழுவதும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்