வத்தலகுண்டு அருகே அமையவிருந்த டோல்கேட்... அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இன்று திறப்பு விழா காண தயாராக இருந்த டோல்கேட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே டோல்கேட் அமைக்கும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தது. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை 4 வழிச்சாலைக்காக திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிச் சாலை மட்டுமே அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த இரு வழி சாலையில் வத்தலக்குண்டு அருகே உள்ள லட்சுமிபுரத்தில் இன்று புதிதாக கட்டப்பட்ட டோல்கேட் திறக்கப்பட இருந்தது. இங்கு நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், டோல்கேட்டை அமைத்து வந்தனர் டோல்கேட் நிர்வாகத்தினர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையிலேயே டோல்கேட்டை திறக்க இன்று சுங்கச்சாவடி நிர்வாகம் தயார் செய்து வந்தது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திடீரென டோல்கேட்டை அடித்து நொறுக்கினர். டோல்கேட்டில் இருந்த அனைத்து உபகரணங்களும் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், டோல்கேட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வத்தலகுண்டு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பரபரப்பு நிலவியது.