தொகுதி மறு சீரமைப்பு, ஹிந்தி திணிப்பு: திமுக சார்பில்.தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன பொதுக்கூட்டம்

Manjula Devi
Mar 12, 2025,02:15 PM IST

சென்னை: தொகுதி மறு சீரமைப்பு மற்றும் ஹிந்தி திணிப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.திருவள்ளூரில்  நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்.


கடந்த மார்ச் ஐந்தாம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஐந்து கட்சிகளைத் தவிர தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன. அப்போது அனைத்து கட்சியின் முன்னிலையில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் தொகுதி மறு சீரமைப்பு குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தொகுதி மறு சீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்திட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இந்த தீர்மானம் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டு முன்மொழிந்தனர்‌. அதன்படி, தொகுதி மறு சீரமைப்பு, ஹிந்தி திணிப்பை கண்டித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் வரும் மார்ச் 12ஆம் தேதி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது.




இந்த நிலையில் தொகுதி மறு சீரமைப்பு, தேசிய கல்விக் கொள்கை எனும் ஹிந்தி திணிப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெறுகிறது. 


இந்த பொதுக்கூட்டங்கள் மூலமாக மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதேபோல் குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துறைமுருகனும், திருச்சி பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேருவும், திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.