விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: விழுப்புரம் மாவட்டத்திற்கு ஜூலை 10ம் தேதி பொது விடுமுறை

Meenakshi
Jul 06, 2024,01:42 PM IST

விழுப்புரம்:   விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அத்தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.




இத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 56 பேர் மொத்தம் 64 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சி இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவித்திருந்தார்.


இந்நிலையில், இது குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தொகுதிக்கு உள்பட்டு வரக்கூடிய அனைத்துப் பகுதிகளுக்கும் ஊதியத்துடன் கூடிய உள்ளூர் விடுமுறை விடப்படும். விக்கிரவாண்டி தொகுதிக்கு உள்பட்டு வரக்கூடிய அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வரம் 10ம் தேதி மூடப்பட்டு இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.