சென்னையில்.. மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தாருக்கு எதிராக திமுக கூட்டணி போராட்டம்

Meenakshi
Feb 28, 2025,07:51 PM IST
சென்னை: இன்று சென்னை ஐஐடிக்கு வருகை தரும் மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தாருக்கு
எதிராக திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கு இடையே கடந்த சில நாட்களாக மும்மொழி கொள்கை தொடர்பான பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும், ஏற்க மறுத்தால், தமிழகத்தில் வழங்க உள்ள கல்விக்கான நிதி  ரூ.2,152 கோடி   வழங்க முடியாது என்றும் கூறியிருந்தார். மேலும், மாணவர்கள் நலன் கருதி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதனையடுத்து அரசியல் காரணங்களுக்காக குறுகிய பார்வையுடன் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகவும், கல்வியை அரசியலாக்க வேண்டாம் எனவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அனுப்பியிருந்தார்.

இந்த மும்மொழி கொள்கை குறித்த சர்ச்சை தற்போது  தீவிரமாகியுள்ளது. தமிழகத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது. இரு மொழிக் கொள்கை மட்டுமே தமிழகத்தில் பின்பற்றப்படும் எனவும் கூறி வருகிறது. 



இந்நிலையில், சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொள்வார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று அவரது தமிழகம் வருகை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதுடன், அவருக்கு பதிலாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று சென்னைக்கு வரும் மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தாருக்கு எதிராக, திமுக, மதிமுக மற்றும் AISF மாணவரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து காந்தி மணடபம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதால் மத்திய அரசு நிதியை முடக்கி வைத்துள்ளதாக குற்றாச்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் திரளான மாணவர்கள் அணி செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிரசன் பங்கேற்றார். அதுமட்டுமின்றி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி  ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது.