மறக்க முடியாத சோசலிச தலைவர்.. சரத் யாதவ்!

Su.tha Arivalagan
Jan 13, 2023,09:19 AM IST
டெல்லி: இந்தியாவின் மறக்க முடியாத சோசலிச தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மறைந்த சரத் யாதவ்.



75 வயதான சரத் யாதவ் நேற்று தனது டெல்லி சத்ரபூர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரத் யாதவ் மரணமடைந்தார்.

70களின் அசைக்க முடியாத சோசலிச தலைவராக விளங்கியவர் சரத் யாதவ்.  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட தலைவர்களில் இவரும் ஒருவர், முக்கியமானவர். லோக்தளம், ஜனதாக் கட்சி என இரு கட்சிகளிலும் முக்கியத் தலைவராக வலம் வந்தார். ஜனதாதளம் பிளவுபட்ட பின்னர், ஐக்கிய ஜனதாதளம் கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இருந்தவர். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் தீவிர அரசியலை விட்டு விலகியிருந்தார்.

1974ம்ஆண்டு ஜபல்பூர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக லோக்சபாவுக்குள் நுழைந்தார் சரத் யாதவ். அப்போது அவர் மாணவர் அணித் தலைவராக இருந்தார். அப்போது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. வலுவான காங்கிரஸ் வேட்பாளரை சரத் யாதவ் வீழ்த்தியது அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் 1975ல் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் 1977ல் நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் சரத் யாதவ்.  இப்போது அவருக்கு அவசர நிலை எதிர்ப்புப் போராளி என்ற புதிய சிறப்பு சேர்ந்து கொண்டது. கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் அவர் எம்.பியாக பதவி வகித்துள்ளார்.

வி.பி.சிங், வாஜ்பாய் அமைச்சரவைகளில் இவர் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை வகித்துள்ளார். 1990ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ்  பீகார் மாநில முதல்வராக முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் சரத் யாதவின் பங்கு அதிகமாகும்.  இருவரும் மிக நெருங்கிய தோழர்களாக இருந்தனர். ஆனால் மாறுபட்ட அரசியல் கண்ணோட்டம் இருவரையும் அரசியல் ரீதியாக பிரித்து விட்டது. 

பீகார் முதல்வர் நிதீஷ் குமார், சரத் யாதவ், மறைந்த முதல்வர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் தங்களுக்கென தனித்த பாதையில் நடை போட்டு மக்களின் மனம் கவர்ந்த தலைவர்கள் ஆவர்.   சரத் யாதவ் பிறந்து வளர்ந்தது எல்லாமே மத்தியப் பிரதேசம்தான். ஆனால் பீகாரை தனது மாநிலமாக அவர் வரித்துக் கொண்டார். 

2017ம் ஆண்டு நிதீஷ் குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக லோக்தந்திரிக் ஜனதாதளம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் சரத் யாதவ். ஆனால் அவரது உடல் நிலை காரணமாக அந்தக் கட்சி செயல்படாமலேயே போனது. பின்னர் 2022ம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதாதளத்துடன் தனது கட்சியை சரத் யாதவ் இணைத்து விட்டார்.