"200 கோடி சம்பளத்தை.. தூக்கிப் போடறாரே.. விஜய் மக்களுக்கு நல்லது செய்வார்".. கே. ராஜன் பேச்சு!

Manjula Devi
Feb 07, 2024,03:54 PM IST

சென்னை: ரூ. 200 கோடி சம்பளம் வாக்குகிறார் நடிகர் விஜய். அந்த சம்பளத்தையே வேண்டாம் என்று கூறி மக்களுக்காக, அரசியலில் இறங்கி இருக்கிறார் என்றால் உண்மையாகவே அவர் மக்களுக்கு நன்மை செய்வார் என நம்புவோம் என நினைவெல்லாம் நீயடா பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ளார்.


அதேசமயம், எல்லாத்துக்கும் புஸ்ஸி ஆனந்த் ஐ வைத்து அறிக்கை விடாமல் தாமே நேரடியாக மக்களை சந்திக்க விஜய் முயல வேண்டும் என்றும் கே. ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இசைஞானி இளையராஜா இசை அமைத்த நினைவெல்லாம் நீயடா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாந்த் லேபில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது:




ஆதிராஜன் நீண்ட நெடுங்காலமாகவே என்னுடைய தம்பியாக உடன் வருபவர். அவர் பத்திரிகையாளராக இருக்கும்போது சில புரட்சிகள் செய்தவர். நான் சில முறை ஜெயிலுக்கு போவதற்கும் அவர்தான் காரணம். ஒரு பத்திரிகையாளராக இருந்ததால் ஒரு படத்தின் தோல்விக்கான அம்சங்கள் என்ன என்பதைத் தெரிந்து 'சிலந்தி' படத்தை இயக்கி வெற்றி பெற்றார். 


'நினைவெல்லாம் நீயடா' படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கும்போதே படம் எப்படி இருக்கும் என்பது பற்றி சொல்லத் தேவையில்லை. மரியாதை குறைவான டைட்டிலாக இருந்தாலும் காதலின் நெருக்கத்தை சொல்வதற்கு பொருத்தமான டைட்டில் தான். இப்படத்தில் இளம் ஜோடிகளைப் பார்க்கும்போது 'அலைகள் ஓய்வதில்லை' கார்த்திக், ராதாவை பார்ப்பது போல இருக்கிறது.


எம்ஜிஆர் போல மாற வேண்டும் விஜய்


இப்போது வரை சூப்பர் ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார். தமிழ் திரையுலகம் சார்பில் அவரை வாழ்த்துகிறேன். அவர் வெற்றி பெற வேண்டும் என்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் செய்த தொண்டுகளில் 15 சதவீதமாவது செய்ய வேண்டும். மக்களிடம் இறங்கி வர வேண்டும். 


மேடையில் இருந்து கொண்டு புஸ்ஸி ஆனந்தை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 200 கோடி சம்பளத்தையும் வேண்டாம் எனக் கூறி மக்களுக்காக இறங்கி இருக்கிறார் என்றால் உண்மையிலேயே அவர் நல்லது செய்வார் என நம்புவோம்.


விஜய் அண்ணாவைப் படிக்க வேண்டும். அவர் வழியில் செயல்பட வேண்டும். அதைச் செய்தால் அவர் வெற்றி பெறுவார் என்று கூறியுள்ளார் கே. ராஜன்.