தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்னாச்சு?

Meenakshi
Apr 25, 2024,05:55 PM IST

சென்னை: பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் பணி புரியும் லட்சுமி என்பவரிடம் நகைகள் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதால் அப்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 


தமிழ் சினிமா உலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பாளராக இருந்து வருபவர் ஞானவேல் ராஜா. ஸ்டுடியோ கிரீன் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். சில்லுனு ஒரு காதல், பருத்திவீரன், சிங்கம், நான் மகான் அல்ல, பிரியாணி, தானா சேர்ந்த கூட்டம், பத்து தல உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர். தற்பொழுது சூர்யா நடிப்பில் கங்குவா மற்றும் விக்ரம் நடிப்பில் தங்கலான் என்ற பெரிய அளவிலான பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறார்.


இந்நிலையில் இவரது வீட்டில் பணி புரிந்து வரும் லட்சுமி என்பவர் இன்று தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் தற்பொழுது பரபரப்பாகியுள்ளது. கடந்த 14ம் தேதி ஞானவேல் ராஜா வீட்டில் நகைகள் திருடு போனதாக மாம்பலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் அவரது வீட்டில் வேலை செய்து வரும் லட்சுமி என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பதில் அளித்த அந்த பெண் தான் நகைகளை  திருடவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு போலீசார் இன்று விசாரணைக்கு நேரில் வருமாறு எழுதி வாங்கிக்கொண்டு அந்த பெண்ணை அனுப்பியதாக தெரிகிறது.




இந்த நிலையில் , திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் இன்று திடீரென அவரது வீட்டில் அரளி விதைகளை அரைத்து குடித்துள்ளார். இதை அறிந்த அப்பெண்ணின் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்பொழுது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அப்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்பொழுது தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.