"விசாரிக்கணும் வாங்க".. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு "ஈடி" சம்மன்: நவம்பர் 2ல் ஆஜராக உத்தரவு

Meenakshi
Oct 31, 2023,06:47 PM IST

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நவம்பர் 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


டெல்லியில் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும் சேர்ந்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்தவழக்கில் ஏற்கனவே துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 


மணீஷ் சிசோடியா பலமுறை ஜாமீன் கேட்டு மனு செய்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் ஜாமீன் கிடைக்காததினால், ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். அங்கும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. 




இந்நிலையில், மதுபான கொள்கையில் நடந்தமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நவம்பர் 2-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.