பிரியங்கா, முதல்வர்கள், தலைவர்கள் புடை சூழ.. சூரத்தை திணறடித்த ராகுல் காந்தி!

Su.tha Arivalagan
Apr 03, 2023,04:01 PM IST

சூரத்:  சூரத் செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்ய வந்த காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியுடன் பெரும் திரளான காங்கிரஸ் தலைவர்கள், முதல்வர்கள், பிரியங்கா காந்தி, நூற்றுக்கணக்கான தொண்டர்களும் வந்ததால் சூரத் கோர்ட் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

கர்நாடகத்தில் 2019ம் ஆண்டு நடந்த தேரத்ல் பிரச்சாரத்தின்போது மோடி துணைப் பெயரைப் பயன்படுத்தி கூறிய கருத்துக்காக ராகுல் காந்தி மீது பூர்னேஷ் மோடி என்ற பாஜக எம்எல்ஏ சூரத் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட், ராகுல் காந்திக்கு  2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி எம்பி. பதவியிலிருந்து லோக்சபா செயலகத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.



இந்த நிலையில் மாஜிஸ்திரேட் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து சூரத் மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ராகுல் காந்தி இன்று அப்பீல் மனுவை சமர்ப்பித்தார். இதற்காக சூரத் வந்த அவருடன் அவரது சகோதரி பிரியங்கா வத்ரா, முதல்வர்கள் அசோக் கெலாட் உள்ளிட்டோர், மூத்த தலைவர்கள், வழக்கறிஞர்கள், கட்சியினர் என பெரும் திரளானோர் சூரத் கோர்ட்டுக்கு வந்தனர். இதனால் கோர்ட் வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.

ராகுல் காந்தி  தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவைப் பரிசீலித்த கோர்ட், அதை ஏப்ரல் 13ம் தேதி விசாரிப்பதாக கூறி உத்தரவிட்டது. மேலும் ஏப்ரல் 13ம் தேதி வரை ராகுல் காந்தியின் ஜாமீனும் நீட்டிக்கப்பட்டுள்ளது.