"அடல் சேது".. 22 கிலோ மீட்டர்.. நாட்டிலேயே மிக நீளமான கடல் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்

Meenakshi
Jan 12, 2024,12:49 PM IST

மும்பை: இந்தியாவில், கடல் மீது கட்டப்பட்ட பாலங்களிலேயே இதுதான் மிக நீளமானது. அந்தப் பெருமையைப் பெற்றுள்ளது, மும்பை - நவி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள 22 கிலோமீட்டர் தொலைவிலான அடல் சேது எனப்படும் கடல் பாலம்.  இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.


மும்பையிலிருந்து ஒருவர் நவி மும்பை பகுதிக்குச் செல்ல வேண்டுமானால் தற்போது குறைந்தது 2 மணி நேரமாகும். கூட்ட நெரிசல், சாலைப் போக்குவரத்து ஹெவியாக இருந்தால் இன்னும் அது கூடும். இப்படிப்பட்ட நிலையில் மும்பை - நவி மும்பைக்கு எளிதாக வந்து செல்வதற்காக புதிய கடல் பாலம் திட்டமிடப்பட்டு தற்போது அது ரெடியாகி விட்டது. அடல் சேது என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாலத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.


ரூ. 17,480 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அதி நவீன பாலம் 22 கிலோமீட்டர் தொலைவிலானது. இந்தியாவிலேயே, கடல் மீது இவ்வளவு நீளமான தொலைவுக்கு  பாலம் அமைக்கப்பட்டிருப்பது இங்குதான்.  இந்த பாலத்தின் வாயிலாக, மும்பை - நவி மும்பை இடையிலான பயண நேரம் வெறும் 20 நிமிடமாக குறையப் போகிறது. 




இந்தப் பாலத்தில் செல்ல சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


- நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே இதில் செல்ல முடியும்.

- மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும்தான் செல்ல வேண்டும்.

- பாலத்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் தான் பயணிக்க வேண்டும்.

- விபத்து ஏற்படாமல் இருக்க வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.  

- பைக், ஆட்டோ, டிராக்டர்கள் இந்த பலத்தில் செல்ல அனுமதி இல்லை.


அதாவது அதி வேகமான வாகனப் போக்குவரத்துக்காக இது திட்டமிடப்பட்டுள்ளதால், பைக், ஆட்டோ போன்றவற்றுக்கு இப்போதைக்கு அனுமதி இல்லை.