21 தீவுகளுக்கு.. பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்..  சூட்டினார் பிரதமர் மோடி!

Su.tha Arivalagan
Jan 23, 2023,11:36 AM IST
டெல்லி: அந்தமான்,நிக்கோபார் தீவுகளில் உள்ள 21 பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரைச் சூட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.



திங்கள்கிழமை டெல்லியில் நடந்த பராகிரம் திவஸ் தினத்தையொட்டி நடந்த விழாவில் இந்த பெயர் சூட்டல் நடைபெற்றது. மேலும் ரோஸ் ஐலன்ட் என்பு முன்பு அறிவிக்கப்பட்டு தற்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீபம் என்று பெயரிடப்பட்டுள்ள தீவில் அமைக்கப்படவுள்ள தேசிய நினைவுச் சின்ன மாதிரியையும் அவர் திறந்து வைத்தார். 

வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்தமானில் இருந்தபடி கலந்து கொண்டார்.

அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் உள்ள மிகப் பெரிய, பெயரிடப்படாத தீவுக்கு முதல் பரம் வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் 1947ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நுழைந்த பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்களுடன் நடந்த மோதலில் உயிர்த் தியாகம் செய்தவர்.

21 தீவுகளுக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்கள் விவரம்:

மேஜர் சோம்நாத் சர்மா, சுபேதார் கெளரவ கேப்டன் கரம் சிங், 2வது லெப்டினென்ட் ராமா ரகோபா ரானே, நாயக் ஜதுநாத் சிங், கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங், கேப்டன் சலரியா, லெப்டினென்ட் கர்னல் தன் சிங் தாபா, சுபேதார் ஜோகிந்தர் சிங், மேஜர் சைதான் சிங், அப்துல் ஹமீத், லெப்டினென்ட் கர்னல் அர்டெசிர் புர்ஜோர்ஜி தாராபூர், லேன்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா, மேஜர் ஹோஷியார் சிங், 2வது லெப்டினென்ட் அருண் ஷேத்திரபால், பிளையிங் ஆபீசர் நிர்மல்ஜித் சிங் சேக்கான், மேஜர் ராமசாமி பரமேஸ்வரன், நயிப் சுபேதார் பானா சிங், கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினென்ட் மனோஜ் குமார் பாண்டே, சுபேதார் மேஜர் சஞ்சய் குமார், சுபேதார் மேஜர் கிரெனடியர் யோகேந்திர சிங் யாதவ்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினமான ஜனவரி 23ம் தேதியை பராகிரம திவஸ் என்று கடந்த 2021ம் ஆண்டு முதல் மத்திய அரசு கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.