பிரதமர் மோடி ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்.. அடுத்த பிரதமர் வரும் வரை நீடிக்க உத்தரவு!

Meenakshi
Jun 05, 2024,05:57 PM IST

டெல்லி:   கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜூன் 8ல் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3வது முறையாக பிரதமராகிறார் மோடி. இந்த நிலையில் பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார்.


2024ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இருப்பினும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 290 இடங்கள் கிடைத்துள்ளன. இந்தியா கூட்டணிக்கு 235 இடங்கள்  கிடைத்துள்ளன. 




தாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்துதான் தேர்தலை சந்தித்தோம். எனவே எங்களது ஆதரவு நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் கூறி விட்டன. இதனால் மீண்டும் பாஜக ஆட்சி அமையவுள்ளது.  கடந்த 2 முறையும் அறுதிப் பெருபான்மையைப் பெற்று ஆட்சியமைத்து வந்தது பாஜக. ஆனால் தற்போது பெரும்பான்மை பலம் இல்லாததால், இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


பிரதமர் பதவி ராஜினாமா:


முன்னதாக, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் 17வது லோக்சபாவை கலைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதன் பின்னர் அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் புடை சூழ குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.  அந்த கடிதத்தை அவர் ஏற்றுக் கொண்டார். அடுத்த ஆட்சி அமையும் வரை பதவியில் நீடிக்குமாறு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டார்.


இன்று மாலை 3 மணிக்கு பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடக்கவுள்ளது. அக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்படுவார். அதன் பின்னர் மீண்டும் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப்படும்.  வரும் 8ம் தேதி மோடி 3வது முறையாக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.