சரியாக 400 நாட்கள்.. மக்களிடம் செல்லுங்கள்.. மனங்களை வெல்லுங்கள்.. பாஜகவுக்கு மோடி அழைப்பு

Su.tha Arivalagan
Jan 18, 2023,09:52 AM IST
டெல்லி: லோக்பசா தேர்தலுக்கு இன்னும் சரியாக 400 நாட்கள் இருக்கின்றன. நாம் மக்களுக்கு ஆற்றும் சேவையை அதிகரிக்க வேண்டும். மக்களிடம் செல்ல வேண்டும்.  அவர்களது மனங்களை வெல்ல வேண்டும்,. வரலாறு படைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பாஜகவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.



டெல்லியில் பாஜகவின் 2 நாள் தேசிய  செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிகரமான உரையாற்றியுள்ளார். இதுகுறித்த தகவலை மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்தி பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பட்னாவிஸ் கூறுகையில்,  நாட்டில் உள்ள 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்களைக் குறி வைத்து செயல்படுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.  லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள் உள்ளன. நாம் மக்களுக்கு முடிந்த எல்லா சேவைகளையும் ஆற்ற வேண்டும். வரலாறு படைக்க வேண்டும். எனவே மக்களிடம் செல்லுங்கள் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

நமது ஆட்சி இல்லாத மாநிலங்களில் மக்களுக்கு நல்லாட்சி என்றால் என்ன என்பதை நாம் விளக்கிச்  சொல்ல வேண்டும். நல்லாட்சி கிடைக்க பாஜகவுக்கு அவர்கள் ஆதரவாக திரும்ப வேண்டும் என்பதை விளக்க வேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  நல்லாட்சியின் அங்கமாக அவர்களை மாற்ற வேண்டும்.

நமது கட்சியை கிராமங்களில் வலுவாக்க வேண்டும். எல்லைப் புறங்களில் நமது கட்சி பலப்படுத்தப்பட வேண்டும். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் நமது கட்சியை பிரபலமாக்க வேண்டும். சிறுபான்மையினரிடமும் நமது கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும். தேர்தல் ஆதாயத்துக்காக இல்லாமல் அவர்களிடையே நமது கொள்கைகளை கொண்டு செல்ல வேண்டும்.

நாம் இனியும் ஒரு சாதாரண அரசியல் இயக்கம் அல்ல.. நாம் சமுதாய இயக்கம். சமூக பொருளாதார சூழலை மாற்றும் அமைப்பாக மாறியுள்ளோம். இந்தியாவின் சிறந்த பொற்காலம் வந்து கொண்டுள்ளது. இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் பேசியதாக பட்னாவிஸ் தெரிவித்தார்.