ஸ்ரீரங்கத்தில் பிரதமர் மோடி.. ரங்கநாதர் கோவிலில்  சாமி தரிசனம்.. பாஜகவினர் உற்சாக வரவேற்பு

Meenakshi
Jan 20, 2024,11:29 AM IST

திருச்சி: சென்னையில் இருந்து திருச்சி வந்து சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் வந்து தற்போது ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார். அங்கு கம்பன் மண்டபத்தில் அவர் ராமாயண பாராயனத்தையும் கேட்கவுள்ளார்.


தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்னை வந்தார் பிரதமர் மோடி. சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று மாலை கேலோ இந்திய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் இரவு சென்னையில் ஆளுநர் மாளிகையில் தங்கி இருந்தார். இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு, திருச்சி வந்து சேர்ந்தார்.


பின்னர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் வந்த அவர் ரங்கநாதர் சுவாமி  கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். கோவிலுக்குள் பிரதமர் மற்றும் குறிப்பிட்ட சிலர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கோவில் வளாகத்தில் உள்ள கம்பன் கழகத்தில் ராமாயன பாராயனத்தையும் பிரதமர் மோடி கேட்கவுள்ளார்.




பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி ரங்கநாதர் கோவிலில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றியுள்ள பகுதி அனைத்தும் பிரதமரின் பாதுகாப்பு குழுவினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் பிரதமர் மோடி, ராமேஸ்வரம் செல்ல உள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு குழுவினர் திருச்சி மற்றும் ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருச்சி மற்றும் ராமேஸ்வரத்தில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


ரமேஸ்வரம் வரும் பிரதமர், ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட உள்ளார். அதன் பின்னர் சாமி தரிசனம் செய்து விட்டு. அங்குள்ள 22 தீர்த்த நீரை சேகரித்து அயோத்தியில் வருகின்ற 22ம் தேதி நடைபெறும் கும்பாவிஷேகத்திற்கு கொண்டு செல்ல உள்ளார். 


நாளை அவர் தனுஷ்கோடி மற்றும் கோதண்ட ராமர் கோயில் செல்கிறார். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வருகிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் நாளை பிற்பகல் டெல்லி செல்கிறார்.


பிரதமர் சுற்றுப்பயணம் செல்லும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதர் செல்லும் கோவில்களுக்கு நாளை மதியம் வரை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.