விஜயகாந்த்துக்கு சிலை.. கட்டி அணைத்து கண் கலங்கிய பிரேமலதா.. தொண்டர்கள் நெகிழ்ச்சி

Su.tha Arivalagan
Aug 25, 2024,12:20 PM IST

சென்னை: தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்த்துக்கு கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது. சிலையைத் திறந்ததும் அதைக் கட்டிப்பிடித்து கண் கலங்கினார் தேமுதிக பொதுச் செயலாளரும், விஜயகாந்த்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த்.


கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவரான விஜயகாந்த்தின் 72வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி அவர் மறைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் வந்துள்ள முதல் பிறந்த நாள் என்பதால் தொண்டர்களிடையே பெரும் சோகமும், நெகிழ்ச்சியும் காணப்பட்டது. 


முதல் பிறந்த நாளை மாநிலமெங்கும் மிகப் பெரிய அளவில் கொண்டாட தேமுதிக நிர்வாகிகள் முடிவெடுத்து அதற்கேற்ப பல்வேறு வகையான நிகழ்வுகளுடன் இன்றைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் விஜயகாந்த் புகழ் பாடும் பதிவுகள் நிரம்பியிருக்கின்றன.




அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி அவரை நினைவு கூர்ந்துள்ளனர்.


விஜயகாந்த் பிறந்த நாள் வறுமை ஒழிப்பு தினமாக அவர் உயிருடன் இருந்த போதிலிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் வறுமை ஒழிப்பு தினமாக அது கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேமுதிக தலைமைக் கழக வளாகத்தில் விஜயகாந்த்தின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். பின்னர் சிலையை கட்டி அணைத்து சிறிது நேரம் கண் கலங்கியபடி இருந்தார். அதன் பின்னர் சிலையின் காலில் விழுந்து அவரும், அவரது மகன்கள், மைத்துனர் சுதீஷ் ஆகியோர் வணங்கினர்.


விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் வழக்கம் போல ஆயிரக்கணக்கில் தேமுதிகவினரும், பொதுமக்களும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கம் போல அன்னதானமும் வழங்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்