விஜயகாந்த்திடம் ஆசி பெற்று லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் பிரேமலதா விஜயகாந்த்..இன்று முதல்

Manjula Devi
Mar 29, 2024,11:07 AM IST

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.


அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இதில் தேமுதிகவிற்கு விருதுநகர், மத்திய சென்னை உள்ளிட்ட ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன், பாஜக கூட்டணியில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கு சிட்டிங் எம்.பியாக காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் களத்தில் இருக்கிறார்.




இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் இன்று முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார் என அக்கட்சி அறிவித்துள்ளது. இன்று முதல் அனல் பறக்கும் பிரச்சாரத்தை ஆரம்பிக்க உள்ள பிரேமலதா விஜயகாந்த் நீலகிரி, கோவை, திருப்பூர் ஈரோடு, போன்ற மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். மேலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, புதிய தமிழகம், எஸ் டி பி ஐ, ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும் தீவிர பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.


ஏற்கனவே தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி .. ராசியான கூட்டணி.. என பரப்புரை மேற்கொண்டது நினைவிருக்கலாம். எம்ஜிஆர் - ஜெயலலிதா - விஜயகாந்த் ஆகிய மூன்று தெய்வங்களின் ஆசியோடு அதிமுக - தேமுதிக கூட்டணி களம் காண்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது பிரச்சாரத்தால் தேமுதிகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.