கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து.. அதிமுக உண்ணாவிரதம்.. பிரேமலதாவும் பங்கேற்பு

Meenakshi
Jun 27, 2024,01:19 PM IST

சென்னை: சென்னை எழும்பூரில் அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷசாராயம் குடித்து 150க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 63 பேர் பலியாகினர். மேலும் 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.


கள்ளச்சாராய பலி சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். சிபிஐக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 3 நாட்களாக வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து புகார் மனுவும் அளித்துள்ளனர்.


சட்டபேரவையில் அதிமுகவினர் பங்கேற்க தடை:




கடந்த 3 நாட்களாக சட்டசபையில் அமளியில் ஈடுபட்டும், சட்டசபையில் கேள்வி நேரத்திலேயே இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுவினர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.  கடந்த 21ம் தேதி அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர்  அதிமுகவினர் சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பும் செய்தனர். 


இதனால், சட்டசபையின் மாண்பை சீர்குலைத்ததாக கூறி நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.


உண்ணாவிரத போராட்டம்:


இந்நிலையில் அதிமுக சார்பில், இன்று சென்னையில் உண்ணணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்று நேற்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அவர் அறிவிப்பின் படி இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அதிமுகவினர் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்னறனர்.


இந்த உண்ணாவிரதம் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிதத்தில் பங்கேற்றனர். இந்த உண்ணாவிரப் போராட்டம் மாலை 5 மணி வரைக்கு நடைபெற உள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் அறிவித்துள்ளனர்.


தேமுதிக ஆதரவு:


அதிமுகவினர் நடத்திய இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இந்த போராட்டம் இதோடு முடிந்து விடாது. நாளை கவர்னரை சந்தித்து தேமுதிக சார்பில் மனு அளிக்க உள்ளோம். கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் அப்போது தான் உண்மை வெளியே வரும் என்று கூறினார்.