"என்னோட கேப்டன்".. கையில் பச்சை குத்திக் கொண்ட பிரேமலதா விஜயகாந்த்.. பேரன்பு!

Su.tha Arivalagan
Feb 05, 2024,06:48 PM IST

சென்னை: மனைவி மீது கணவர் அன்பு வைப்பதும்.. கணவர் மீது அன்பு வைப்பதும் சாதாரணமானது, இயல்பானது.. ஆனால் இருவரும் பரஸ்பர உயர்வுக்காக இணைந்து உழைப்பது என்பது எல்லோருக்கும் வாய்க்காது. பிரேமலதா விஜயகாந்த்துக்கு அப்படித்தான் இருந்தார் விஜயகாந்த்.  விஜயகாந்த்துக்கும், பிரேமலதா அப்படித்தான் வாழ்ந்தார்.


விஜயகாந்த் இயல்பிலேயே நிறைய விட்டுக் கொடுக்கும் குணம் கொண்டவர். எதார்த்தமாக வாழ்ந்தவர். கோபம், அன்பு, பாசம், நட்பு, வேகம், விவேகம் என எதிலுமே அவர் குறைந்தவர் அல்ல.. இந்த குணங்கள் எல்லாவற்றிலும் உச்சம்  பார்த்தவர். பாய வேண்டிய இடத்தில் பாய்வார்.. பதுங்க வேண்டிய இடத்தில் பதுங்குவார்.. பாசம் காட்ட வேண்டிய இடத்தில் அதைக் கொட்டுவார்.. கொடுக்க வேண்டிய இடத்தில் அள்ளித் தருவார்.. இதுதான் அவரது இயல்பும், அடையாளமும்.


விஜயகாந்த் - பிரேமலதா திருமணம் மதுரையில் நடந்தபோது கண்ட காட்சிகள் இன்னும் கூட பசுமையாக உள்ளன. மதுரைக்கு சித்திரைத் திருவிழாதான் உச்சமான உற்சாகம், கொண்டாட்டம். அதை ஆன்மீக விழாவாகவே மதுரைக்காரர்கள் எடுத்துக் கொள்ளவில்லை.. காரணம் அத்தனை மதத்தினரும் அந்த விழாவை உற்சாகமாக பார்ப்பார்கள். அப்படிப்பட்ட சித்திரைத் திருவிழாவை மிஞ்சிய கொண்டாட்டம் விஜயகாந்த் திருமணத்தின்போது மதுரையில் காணப்பட்டது.




எங்கு பார்த்தாலும் விஜயகாந்த் படப் பாடல்கள் ஒலிக்க, ஊர் முழுக்க விஜயகாந்த் ரசிகர்கள் குதூகலிக்க, ஆங்காங்கு அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட, தமுக்கம் மைதானத்தில் பிரமாண்ட திருமணச் சாப்பாடு என மிகப் பெரிய அளவில் விஜயகாந்த் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் இந்த ஜோடியைப் போல கிடையவே கிடையாது என்று எல்லோரும் சொல்லும் அளவுக்கு விஜயகாந்த் - பிரேமலதாவின் வாழ்க்கையும், வளர்ச்சியும் இருந்தது.


கட்சி ஆரம்பித்தபோது பலரும் வாரிசு அரசியல் என்று கூறியபோது, என் மனைவி என் கூட இருக்காங்க.. கணவருக்கு செய்ய வேண்டிய உதவியைச் செய்கிறார்.. புருஷனுக்கு பொண்டாட்டி உதவி செய்யக் கூடாதா..  இதில் எங்கே வந்தது வாரிசு அரசியல் என்று கேட்டார் விஜயகாந்த். விஜயகாந்த்தின் அரசியல் வளர்ச்சியில் முதல் நிலையிலிருந்து கடைசி வரை இணைந்து பயணித்தார் பிரேமலதா.


இருவரும் இணைந்து எடுத்த முடிவுகள் பல நேரங்களில் வெளியில் சலசலப்பாக பார்க்கப்பட்டாலும், பேசப்பட்டாலும் கூட, உள்ளுக்குள் விஜயகாந்த்துக்கு இணக்கமான துணையாக நின்றவர் பிரேமலதா விஜயகாந்த் என்பதில் சந்தேகம் இல்லை.  விஜயகாந்த்தின் ஒவ்வொரு முயற்சியிலும், செயலிலும் கூடவே நிழல் போலவே பயணித்தவர் பிரேமலதா. நிச்சயம், பிரேமலதாவின் ஒத்துழைப்பும், உறுதுணையும் இல்லாமல் போயிருந்தால், கண்டிப்பாக விஜயகாந்த் இந்த அளவுக்கு உயரம் தொட்டிருப்பாரா என்பது சந்தேகம்தான்.


அப்படிப்பட்ட விஜயகாந்த்தை இழந்தது மற்றவர்களேயே இந்த அளவுக்கு வலியைக் கொடுத்திருக்கும்போது கட்டிய மனைவி பிரேமலதாவுக்கு எவ்வளவு பெரிய இழப்பு.. அந்த இழப்பிலிருந்து இன்னும் கூட முழுமையாக வெளியே வராமல் தடுமாறிக்கொண்டுதான் இருக்கிறார் பிரேமலதா. வெளியில் தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் விஜயகாந்த் பற்றிப் பேசும்போதெல்லாம் அவரது கண்கள் தளர்வதை உணர முடிகிறது. ஈடு செய்ய முடியாத இழப்புதான்.


இப்போது தான் ரசித்த, தான் விரும்பிய, தனக்கு அருமையான வாழ்க்கையைக் கொடுத்த, தன்னுடயை நினைவுகளை விட்டு அகல முடியாத ஆளுமையான விஜயகாந்த் உருவத்தை தனது கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். பேரன்பின் வெளிப்பாடுதான் இதெல்லாம்..!


ஒரு கவிதை சொல்வோம் இந்த அருமையான தம்பதிக்கு..


அடர்ந்த வனத்தில்

பொக்கிஷங்களைத் தேடிக் கொண்டிருந்தேன்

உன் முகம் தென்பட்டது

ஆற்று நீரில் மெல்ல அசையும் நிலவு போல

அள்ளி எடுத்தேன் நீரை

அல்ல..!

உன் முகத்தை!

நீரைப் பருகினேன்

அதில் நீ இருந்ததால்!

நீருக்கும் அப்பால்

அந்த நிலவுக்கும் அப்பால்

எப்போதும் என் நினைவில்

அசைந்தாடியபடி நீ!