நீலகிரி, கோவைக்கு கன மழை.. மஞ்சள் எச்சரிக்கை.. முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

Manjula Devi
Aug 01, 2024,05:39 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.


தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் குந்தா, கூடலூர், பந்தலூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.




கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள வயநாடு பகுதிகளில் தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பிற்குள்ளானது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். பலரின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. இதை பாடமாக எடுத்துக் கொண்டு, நீலகிரியில் தற்போது தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள, பாதுகாப்பற்ற பகுதிகளை முன்கூட்டியே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.


இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோவையில் கனமழை தொடரும் எனவும் அப்பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து மேற்கு தொடர்ச்சி மாவட்ட ஆட்சியாளர்களுடன் தலைமைச் செயலாளர் சீவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். அப்போது நீலகிரி கோவை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். 


பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து அங்கு முன்கூட்டியே பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறையினர் மூலம் பணிகளை துரிதப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். அதோடு அரக்கோணத்தில் இருந்து 60 பேர் கொண்ட  தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர். இது தவிர மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் குறித்தும், எந்த இடத்தில் வெள்ளம் ஏற்ப்படும் என்பது குறித்தும் மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.


இதனிடையே நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்காக வரும் பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்லவும் மாவட்ட ஆட்சியாளர் பவ்யா அறிவுறுத்தி உள்ளார்.