2026 சட்டமன்றத் தேர்தலில்..விஜய் தனித்து போட்டியிட முடிவு..தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்

Manjula Devi
Mar 01, 2025,08:44 PM IST

சென்னை: 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட விஜய் முடிவு செய்துள்ளார். தனித்துப் போட்டியிட்டு ஆட்சி அமைப்பார் என தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாத் கிஷோர் தந்தி டிவிக்கு பிரத்யோக பேட்டி அளித்துள்ளார். 



நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அப்போது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என கூறி கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி,  விக்கவாண்டியில் நடைபெற்ற  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் திமுகவையும் பாஜகவையும் விஜய் விமர்சித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மறுபக்கம் தேர்தல் பணிகளை எதிர்கொண்டு தீவிரமாக களமிறங்கிய நடிகர் விஜய் 120 மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணிகளை செய்து முடித்தார். அதே சமயத்தில் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா, வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கிய சாமியும் தவெகவில் இணைந்தனர்.


இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.




சமீபத்தில் நடைபெற்ற தவெவின் முதலாம் ஆண்டு விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு முக்கியத்துவம் கொடுத்து மேடை ஏற்றினார் விஜய். அப்போது பிரசாந்த் கிஷோர் விஜய் ஒரு தலைவர் அல்ல. தமிழ்நாட்டின் நம்பிக்கை. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம்  தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பேசியிருந்தார்.


இந்த நிலையில் ஜான் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தந்தி டிவிக்கு பிரத்யோக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,


தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நினைக்கிறார். என்னால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்வேன்.பீகார் தேர்தலில் எனக்கு உதவி செய்வதாக விஜய் உறுதி அளித்துள்ளார். பீகாரில் விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.


2026 சட்டமன்றத் தேர்தலில்,தனித்து போட்டியிட வேண்டும் என்பதே விஜய் முடிவு செய்துள்ளார். அதிமுக விஜய்யுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தவெக விரும்பவில்லை. கூட்டணியின்றி விஜய் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவார். தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைப்பார்  என கூறியுள்ளார்.