விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

Su.tha Arivalagan
Feb 26, 2025,05:26 PM IST

சென்னை: நடிகர் விஜய் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை. அவருக்கு எல்லாமே தெரியும். அவர் சாதிப்பார். அடுத்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் இருக்கும் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.


சென்னையில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு பிரஷாந்த் கிஷோர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


விஜய்க்கு உதவ நான் வரவில்லை. எந்த உதவியும் விஜய்க்கு தேவையில்லை. விஜய்க்கு எல்லாமே தெரியும். அவரே சாதிக்க முடியும். சாதிப்பார். அவர் இன்னும் ஒரு தலைவர் இல்லை. அவர் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை. அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன். புதிய அரசியல் சகாப்தத்தை விஜய் தொடங்கி வைத்துள்ளார். மாற்றத்திற்கான நேரம் இது. விஜய் தலைமையில் தவெக இந்த மாற்றத்தை, நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. 




தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை முழுமையாக மாற்றப் போகிறார் விஜய் அதை அவரிடம் பேசும்போது நான் உணர்ந்து கொண்டேன். அனைத்து சமூகங்களின் நலனுக்காக, சமத்துவத்திற்காக நிறைய திட்டங்களை வைத்துள்ளார் விஜய். அதனால்தான் விஜய்க்கு உதவி செய்ய நான் வந்துள்ளேன். அடுத்த ஆண்டு தவெக வெல்லும்போது, இங்கு நடைபெறும் நன்றி அறிவிப்பு விழாவில் நான் தமிழில் பேசுவேன். 


தமிழ்நாடு நிறைய சாதித்துள்ளது. நிறைய வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் ஊழல், ஜாதியவாதம், வாரிசு அரசியல் ஆகியவற்றில் சிக்கியுள்ளது தமிழ்நாடு. இதிலிந்து விடுபட வேண்டும். நாட்டின் தலைமை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால் இது நடக்க வேண்டும்.


இப்போது தோனி இங்கு பாப்புலராக உள்ளார். அடுத்த ஆண்டு தவெகவை வெல்ல வைத்தால் நான் பாப்புலராகி விடுவேன். அதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன்.


அடுத்த ஆண்டுக்குள் ஒவ்வொரு தவெக தொண்டரும், 3 பேரை கட்சியில் சேர்க்க வேண்டும். இதை அனைவரும் உறுதியாக செய்ய வேண்டும் என்றார் பிரஷாந்த் கிஷோர்.