பெளர்ணமி கிரிவலம் .. திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Meenakshi
Dec 26, 2023,12:27 PM IST

திருவண்ணாமலை: பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலையில்  உள்ள 14 கிலோமீட்டர் தொலைவிலான  கிரிவலப் பாதையில் மாதம் தோறும் பௌர்ணமி நாட்களில் பல லட்சக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அருணாச்சலேஸ்வரர், அம்மனை வழிபட்டு செல்வதால் செல்வம் செழிக்கும் என்று நம்பப்படுகிறது.


இந்நிலையில் மார்கழி மாத பௌர்ணமி செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன் கிழமை வரை  இருப்பதால், அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் 20 சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 




பயணிகள் www.tnstc.in மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின்  செயலிகள் மூலம் முன் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம் என்றாலும், பௌர்ணமியில் வரும் மலை வலம் மிகச் சிறப்புடையதாக கருதப்படுகிறது. அதனால் பக்தர்கள் அனைவரும் பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம்  வருகின்றனர். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடி சிவ புராணத்தையும் பாராயணம் செய்தபடி கிரிவலம் வர வேண்டும். 


பெளர்ணமியில் கிரிவலம் வந்தால் பற்பல நன்மைகள் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். இதனால், பெளர்ணமி மலைவலம் சித்தர்களால் சிறப்பாக போற்றப்படுகிறது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கூட்டம் அதிகளவில் வரும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.